குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் ராஜரத்தினம் (69). தோட்டத்தில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தார். இவர் கடந்த 14ஆம் தேதி தோட்டத்திற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார்.
பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் மகன் சிவராஜன் (38) என்பவர் தந்தையை பல்வேறு இடங்களில் தேடி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (15-ம் தேதி) வாழைத்தோட்டத்திற்கு அருகே மரம் வெட்ட சென்ற ஜெகதீஷ் என்பவர் ராஜரத்தினம் தலையில் காயத்துடன் இறந்து கிடப்பதை கண்டு இது தொடர்பாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த வெள்ளிச்சந்தை போலீசார் ராஜரத்தினத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மழை காரணமாக ராஜரத்தினம் தோட்டத்தில் இருந்த சகதியில் நடந்து சென்றபோது வழுக்கி விழுந்து தலையில் பலத்த காயமடைந்து கிடந்ததாக தெரிய வந்தது. இது குறித்து புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.