ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கடல் கண்ணிவெடிகளைப் பதித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பான வரைபடம் ஒன்றை அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இது அப்பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் புரட்சிகர காவல்படையுடன் நெருங்கிய தொடர்புடைய ‘இஸ்னா’ மற்றும் ‘தஸ்னிம்’ ஆகிய செய்தி நிறுவனங்கள் கடல் கண்ணிவெடிகள் தொடர்பான வரைபடத்தை நேற்று வெளியிட்டன. பாரசீக வளைகுடாவின் குறுகிய நுழைவுப் பகுதியான ஹார்முஸ் ஜலசந்தியில், கப்பல்கள் வழக்கமாகப் பயணிக்கும் பாதையை ‘ஆபத்தான பகுதி’ என பாரசீக மொழியில் அந்த வரைபடத்தில் எழுதப்பட்டுள்ளது.
இது, அப்பகுதி வழியாக செல்லும் உலக நாடுகளின் கப்பல்களுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 15 சரக்கு கப்பல்களுக்கு அனுமதி உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் 20 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி பகுதி வழியாகவே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டை நிறுத்த ஒப்பந்த விதிமுறைகள் படி, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நாள் ஒன்றுக்கு 15 சரக்கு கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் கூறும் விதிமுறைகள் படி, குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டுமே சரக்கு கப்பல்கள் செல்ல வேண்டும்.
ஈரான் போருக்கு முன்பு சர்வதேச கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தடையின்றி சென்றது போல் தற்போது செல்ல முடியாது. இந்த கட்டுப்பாடுகளால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் பேரல் ஒன்றுக்கு 97 டாலரைத் தாண்டியது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2.9 சதவீதம் உயர்ந்து 97.46 டாலராக வர்த்தகமானது. இந்தியா மட்டுமின்றி ஆசிய பங்குச் சந்தைகளும் நேற்று சரிவைச் சந்தித்தன.














