பொது விநியோகத் திட்டத்துக்கு தனித்துறை உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொது விநியோகத் திட்டத்துக்கு தனித்துறை உருவாக்க வேண்டும், ‘தாயுமானவர்’ திட்டத்தில் உள்ள பிரச்சினைகளைக்களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் சென்னை சிவானந்தா சாலையில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.ஜெயசந்திரராஜா தலைமைவகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. கே.சுப்புராயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம் குறித்து செய்தியாளர்களிடம் கோ.ஜெயசந்திரராஜா கூறியதாவது: தமிழக ரேஷன் கடைகளில் பணிபுரிந்துவரும் பணியாளர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக ஆக்கப்பூர்வமான பயன்கள் எதுவும் கிடைக்கவில்லை.
பல துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளை ஒரே துறையின் கீழ் கொண்டுவரும் வகையில் பொது விநியோகத் திட்டத்துக்கு தனித்துறை, அத்தியாவசியப் பொருட்கள் அனைத்துக்கும் பொட்டல முறை, ஆதார் சரிபார்ப்பு 40 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
கல்வித் தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க ஏதுவாக, ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஊதிய மாற்றக் குழு அமைத்து 2026-ம் ஆண்டு ஜனவரிக்குள் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
மகளிர் நடத்தும் ரேஷன் கடைகளை அரசு ஏற்று அவர்களுக்கும் ரேஷன் கடை பணியாளர்களைப் போல் ஊதியம் வழங்க வேண்டும். ‘தாயுமானவர்’ திட்டத்தில் உள்ள பிரச்சினைகளைக்களைந்து, அனைத்து ரேஷன் கடைகளிலும் எடையாளரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும்.
கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் மாநில செயற்குழு கூட்டத்தைக் கூட்டி, அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.







