கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலை பணிகள் கடந்த 2010 ஆம் ஆண்டு தொடங்கியது. இதற்காக நிலம் வழங்கியவர்களுக்கு அரசு அனைவருக்கும் ஒரே மாதிரியான இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. குறிப்பாக புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் இழப்பீடு தொகை வழங்குவதில் பிரச்சனை ஏற்பட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீடு தொகை வழங்கப்படும் என கலெக்டர் பார்வையிட்டு கூறினார்.
இதற்கிடையில் இன்று மீண்டும் சாலை பணி தொடங்குவதற்காக அதிகாரிகள், பணியாளர்களுடன் அந்த பகுதிக்கு வந்தனர். அப்போது அந்த பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து மறுபடியும் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் குமரி மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதை அடுத்து மீண்டும் பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டக்காரர்கள் மீண்டும் கலைந்து சென்றனர்.














