பாகிஸ்தானில் ஸ்மார்ட் லாக்-டவுன் அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மார்க்கெட்களை இரவு 8 மணிக்குள்ளும் ஓட்டல்களை இரவு 10 மணிக்குள்ளும் மூடவேண்டும் என்று பாகிஸ்தானில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை சர்வதேச நாடுகளில் உயர்த்தப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலையேற்றம் இதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் பாகிஸ்தானில் கடந்த வாரம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டது. இதனால் அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.458.41 மற்றும் ஒரு லிட்டர் டீசல் ரூ.520.35-க்கும் விற்பனையானது. ஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலை சுமார் 50 சதவீதம் உயர்ந்தது. இதனால் மக்கள் கொதிப்படைந்தனர். இதையடுத்து பெட்ரோல் விலையை 80 ரூபாய் குறைப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தொலைக்காட்சி மூலம் தெரிவித்தார்.
மேற்காசிய போர் முடிவுக்கு வந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை போருக்கு முந்தைய நிலையை எட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று முதல் மார்க்கெட்களை இரவு 8 மணிக்கே மூட வேண்டும் என்றும், ஓட்டல்களை இரவு 10 மணிக்குள் மூடவேண்டும் என்று பாகிஸ்தானில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட் லாக்-டவுன் என்று அழைக்கப்படுகிறது.
கச்சா எண்ணெயைப் பெறுவதில் சிக்கல் நிலவுவதால் இந்த ஸ்மார்ட் லாக்-டவுன் அமலாக்கம் செய்யப்படுகிறது என்றும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதற்கான அனுமதியை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வழங்கியுள்ளார்.
அதன்படி பஞ்சாப், கைபர் பக்துன்கவா, பலூசிஸ்தான், இஸ்லாமாபாத், கில்கித்-பல்டிஸ்டான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள மார்க்கெட்கள், ஷாப்பிங் மால்கள், வர்த்தக மையங்கள் இரவு 8 மணிக்கும், ஓட்டல்கள் இரவு 10 மணிக்கும் மூடப்படும். கைபர் பக்துன்கவாவில் உள்ள சில பகுதிகளில் மட்டும் இரவு 9 மணி வரை வணிக வளாகங்கள், மார்க்கெட்களை திறக்க சிறப்பு அனுமதி தரப்பட்டுள்ளது.














