முதல்வர் விஜய் மீது பொறாமை இல்லை: ரஜினிகாந்த் பேசியது என்ன? – முழு விவரம்

0
26

திரைப்படத் துறையில் இருந்து வந்து, தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளையும் எதிர்த்து தனி ஆளாக விஜய் வெற்றி பெற்றதை பார்க்கும்போது ஆச்சர்யம் கலந்த சந்தோஷம்தான் ஏற்பட்டது. விஜய் மீது எனக்கு எந்த பொறாமையும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது வீட்டுக்கு வெளியே நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது: தேர்தல் முடிவுகள் வந்ததும் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தேன். அதன்பிறகு, என்னைப் பற்றி சமூக ஊடகங்கள், அரசியல் தளத்தில் சில விமர்சனங்கள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன.

ஸ்டாலின் எனது 40 ஆண்டுகால நண்பர். கொள்கைகள், அரசியலுக்கு அப்பாற்பட்டது எங்களது நட்பு. ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி சகஜம். இருந்தாலும், கொளத்தூரில் அவர் தோல்வி அடைந்தது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. அதற்காக, நண்பன் என்ற முறையில் அவரை சந்தித்தேன்.

ஆனால், ‘விஜய் முதல்வராகக் கூடாது. அவர் முதல்வராவதை தடுக்க, வேறு இரு கட்சிகளை ஒன்றுசேர்க்க நான் ஸ்டாலின் வீட்டுக்கு சென்றேன்..’ என்று விமர்சனங்கள் எழுந்தன. அவ்வாறு பேசக்கூடிய தரம்கெட்ட ஆள் ரஜினிகாந்த் கிடையாது.

நான் 2016-ல் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததில் இருந்தே, விமான நிலையம் செல்லும் போதெல்லாம், செய்தியாளர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று கேட்பது வழக்கம். அந்தவகையில், சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்தபோதும், செய்தியாளர்கள் இருக்கிறார்களா என கேட்டேன். யாரும் இல்லை என்றனர். இதையடுத்து, விமான நிலையத்துக்குள் செல்லும்போது, ஒருவர் தனது கையில் செல்போனுடன் வீடியோ எடுத்துக்கொண்டு என்னிடம், ‘‘விஜய் முதல்வர் ஆகி உள்ளாரே?’’ என்று கேட்டார். அவரைப் பார்க்க, செய்தியாளர் போல தெரியவில்லை. அதிர்ச்சி அடைந்த நான், அவரைப் பார்த்து சிரித்துவிட்டு சென்றேன்.

வெற்றி பெற்றதும் வாழ்த்து: இதன்பிறகு, விஜய்க்கு ரஜினிகாந்த் வாழ்த்து சொல்லவில்லை என்று விமர்சனம் எழுந்தது. விஜய் வெற்றி பெற்றதுமே, அவருக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டேன்.

விஜய் மீது எனக்கு பொறாமை என்பது இன்னொரு விமர்சனம். நான் இப்போது அரசியலில் இல்லை. ஏற்கெனவே விலகிவிட்டேன். நான் அரசியலில் இல்லாதபோது, விஜய் மீது எனக்கு ஏன் பொறாமை ஏற்படப் போகிறது. ஒருவேளை, கமல்ஹாசன் முதல்வராக வந்திருந்தால் பொறாமை ஏற்பட்டிருக்குமோ என்னவோ. அப்போதும் பொறாமை வந்திருக்காது. கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்காம இருக்கிறது கிடைக்காது.

தவிர, எனக்கும் விஜய்க்கும் ஒரு ‘ஜெனரேஷன்’ இடைவேளை. சுமார் 25 ஆண்டுகள் வித்தியாசம். நான் ஏற்கெனவே, சொன்னதுபோல, விஜய்யுடன் ஒப்பீடு செய்து கொள்வது எனக்கு நல்லது அல்ல. எனக்குதான் கெட்ட பெயர் ஏற்படும். அதே போல, விஜய் என்னுடன் ஒப்பீடுசெய்து கொண்டால் அவருக்கு தான் கெட்ட பெயர் ஏற்படும்.

என்டிஆர், எம்ஜிஆரைவிட.. சிறு வயதில் இருந்தே விஜய்யை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அவர் முதல்வரானதில் எனக்கு என்ன பொறாமை. அதுவும் இவ்வளவு சிறிய வயதில், என்டிஆர், எம்ஜிஆரைவிட பெரிய சாதனையைப் படைத்திருக்கிறார். மத்தியில் பெரிய அதிகார மையமாக இருக்கும் பாஜக மற்றும் தமிழகத்தில் உள்ள இரு பெரும் கட்சிகளையும் எதிர்த்து தனி ஆளாக வெற்றி பெற்றுள்ளார். அதுவும், சினிமா துறையில் இருந்து வந்து வெற்றிபெற்றிருக்கிறார். இதை பார்க்கும்போது எனக்கு பொறாமை ஏற்படவில்லை. ஆச்சர்யம் கலந்த சந்தோஷம்தான் ஏற்பட்டது.

நான் அரசியலுக்கு வந்திருந்தால் முதல்வர் ஆகியிருப்பேன் என்று ரசிகர்கள் சொல்வது பற்றி கேட்கிறீர்கள். நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று 3 பக்க அறிக்கையுடன் விளக்கமாக பதில் சொல்லியிருந்தேன். அது தெரிந்தும், ரசிகர்கள் சொல்கிறார்கள் என்றால், அவர்களுக்குள் நிச்சயம் வருத்தம் இருக்கும். அதை மறுக்கவில்லை. இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. உங்களுக்குப் பிடித்த கட்சி, பிடித்த சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று ரசிகர்களிடம் அப்போதே கூறிவிட்டேன்.

அரசியல் வேறு, நடிப்பு வேறு. உடல் ஒத்துழைக்காவிட்டால், நடிப்பதை விட்டுவிடலாம். இதனால் ஒரு தயாரிப்பாளர் மட்டுமே பாதிக்கப்படுவார். ஆனால், அரசியல் என்பது பெரிய பொறுப்பு. கோடிக்கணக்கான மக்களைச் சார்ந்தது. எனவே, வந்துவிட்டு திடீரென விலகுவது எளிதானது அல்ல. எனினும், நான் அரசியலுக்கு வந்திருந்தால், 100 சதவீதம் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பேன். ஏற்கெனவே திரையுலகில் இருந்து பலரும் விஜய்யை சந்தித்து பல கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். அதனால்,நானும் சும்மா சம்பிரதாயத்துக்காக சென்று அவரைப் பார்க்க விரும்பவில்லை.

மக்கள் மத்தியில் விஜய் மீது நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேநேரம், ஓரிரு ஆண்டுகள் அவரை மக்கள் கேள்வி கேட்கக்கூடாது. அவர் போக்கில் விட்டுவிட வேண்டும். மேலும், அவரது தொண்டர்கள், ரசிகர்கள் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளவேண்டும். தாங்கள் என்ன தவறு செய்தாலும், அது விஜய்யைதான் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

60 ஆண்டுகால திராவிட அரசியலை மக்கள் பார்த்து விட்டனர். தற்போது அவர்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது. அந்த தருணத்தில்தான் சினிமா புகழுடன் விஜய் அரசியலுக்குள் நுழைந்தார். அவருக்கு 100 சதவீதம் சினிமா கைகொடுத்திருக்கிறது. மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மக்களுக்கு அவர் நல்லது செய்ய வேண்டும். செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here