பிரதமர் மோடியுடன் மியான்மர் அதிபர் ஆங் ஹ்லைங் சந்திப்பு

0
15

இந்தியா வந்துள்ள மியான்மர் அதிபர் யு மின் ஆங் ஹ்லைங் பிரதமர் மோடியைச் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் அதிக ஒத்துழைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள மியான்மர் அதிபர் யு மின் ஆங் ஹ்லைங், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று செய்தியாளர்களிடம் விவரித்தார். அப்போது அவர் கூறியது: “பிரதமர் நரேந்திர மோடியும் மியான்மர் அதிபர் யு மின் ஆங் ஹ்லைங்கும் இரு தரப்பு விவகாரங்கள் தொடர்பாக முழுமையான விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைகளில் வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு, எல்லை மேலாண்மை, மேம்பாட்டு உதவிகள், கலாச்சார பரிமாற்றங்கள், பிராந்திய சூழல் ஆகியவை இடம்பெற்றன.

மக்களுக்கு இடையேயான தொடர்புகளுக்கு இணைப்பு வசதிகள் மிக முக்கியம் என்பதை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். கலடன் பல்வகை போக்குவரத்து திட்டத்தை விரைவாக முடிக்க இணைந்து செயல்பட இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. மியான்மரின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு இந்தியாவின் ஆதரவு தொடரும் என்பதை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இரு நாடுகளின் பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தங்கள் எல்லைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுப்பதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். மியான்மரின் எல்லைப் பகுதிகள் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட அனுமதிக்கப்பட மாட்டாது என்ற உறுதிமொழிமை மியான்மர் அதிபர் மீண்டும் உறுதிபட தெரிவித்தார்.

மியான்மர் ஒரு முக்கிய நாடு, இந்தியாவுடன் 1,643 கிலோமீட்டர் எல்லையை பகிர்ந்து கொண்டிருக்கும் நாடு. இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை, கிழக்கு நோக்கிய செயல்பாடு, மகாசாகர், இந்தோ பசுபிக் கொள்கைகளின் சங்கமமாக மியான்மர் அமைந்துள்ளது. இந்தியா – மியானமருக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகம் 2 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்கள், அரிய வகை மண் தனிமங்கள் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மியான்மரின் முன்னாள் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி விவகாரத்தை பிரதமர் மோடி எழுப்பினார். மியான்மரில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் அமைதிக்கான முன்னெடுப்புகளின் பின்னணியிலேயே இந்த விவாதம் அமைந்திருந்தது. மியான்மருடனான இந்தியாவின் ஈடுபாடு, அந்நாட்டின் உள்நாட்டு அரசியல் ஏற்பாடுகள் குறித்த விமர்சனமாக அமையாது. ஜனநாயகம், அமைதி செயல்முறை, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை போன்ற விவகாரங்கள் குறித்து இந்தியா தனது கருத்துக்களை எப்போதும் முன்வைத்து வந்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here