Home தேசிய செய்திகள் ஆங்கிலப் புத்தாண்டை முஸ்லிம்கள் கொண்டாடுவது தவறு: உத்தரபிரதேச உலாமா ஃபத்வா

ஆங்கிலப் புத்தாண்டை முஸ்லிம்கள் கொண்டாடுவது தவறு: உத்தரபிரதேச உலாமா ஃபத்வா

0

ஆங்கிலப் புத்தாண்டை முஸ்லிம்கள் கொண்டாடுவது தவறு என அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தலைவர் மவுலானா முப்தி ஷகாபுத்தீன் ரிஜ்வீ கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பரேலியின் உலாமாவாகவும் இருக்கும் இவர், ஷரீயத் சட்டத்தை ஆராய்ந்து ஃபத்வாக்களையும் வெளியிட்டு வருகிறார்.

2025 ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாட இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தயாராகி வரும் வேளையில், இவரிடம் முஸ்லிம்கள் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடலாமா என விளக்கம் கேட்டுள்ளனர்.

இதற்கு ஷரீயத் முறைப்படி அவர் சட்டவிளக்கம் அளித்துள்ளார். ரிஜ்வீ தனது ஃபத்வாவில், “ஜனவரி 1-ல் வரும் புத்தாண்டு, பிரிட்டிஷ் மற்றும் கிறிஸ்தவர்களின் பண்டிகை நாள் ஆகும். இந்த நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் கலந்துகொள்ளக் கூடாது. இந்த புத்தாண்டை கொண்டாடுவது ஷரீயத் சட்டப்படி குற்றமாகும். இதை கொண்டாடுவோர் பாவம் செய்தவர் ஆவர்.

இந்த கொண்டாட்டம் அனைத்தும் கிறிஸ்தவர்களின் மதச்சடங்கு ஆகும். முஸ்லிம்கள் பிற மதங்களின் விழாக்களை கொண்டாடுவதும் அதில் பங்கு கொள்வதும் ஷரீயத்திற்கு எதிரானது. இதற்கு ஷரீயத்தில் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளிலும் நேரடி ஒளிபரப்பாகின்றன. இதில், மது அருந்துதல், சூதாட்டங்கள், ஆண்-பெண் இணைந்து நடனமாடுவது உள்ளிட்டவையும் இடம்பெறுகின்றன.

இவை அனைத்துக்கும் ஷரீயத்தில் சிறிதளவும் இடம் அளிக்கப்படவில்லை. ஆகவே, இதுபோன்ற நிகழ்வுகளில் முஸ்லிம்களில் ஆண், பெண் யார் பங்கு கொண்டாலும் அவர்கள் பெரும் பாவம் செய்தவர்களாக கருதப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மவுலானா ஷகாபுத்தீனுக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். செய்தி மற்றும் தொலைக்காட்சி ஊடகத்தில் பிரபலமாவதற்காக இதுபோன்ற ஃபத்வாக்களை அளிப்பது சிலருக்கு வழக்கமாகி விட்டது என அவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version