Home தேசிய செய்திகள் காஷ்மீர் ‘புல்டோசர்’ நடவடிக்கை அமைச்சர் கடும் கண்டனம்

காஷ்மீர் ‘புல்டோசர்’ நடவடிக்கை அமைச்சர் கடும் கண்டனம்

0

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்களின் சொத்துகளைக் கண்டறிந்து அவற்றை இடிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்பு மற்றும் வணிக ரீதியான கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

இந்த அதிரடி நடவடிக்கை குறித்து காவல்துறை உயரதிகாரிகள் கூறுகையில், “போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்குத் தெளிவான மற்றும் உறுதியான எச்சரிக்கையை விடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதை இது உணர்த்தும்” என்று தெரிவித்தனர்.

போலீஸாரின் இந்த ‘புல்டோசர்’ நடவடிக்கைக்கு ஜம்மு- காஷ்மீர் மாநில சுகாதார துறை அமைச்சர் சகினா இட்டூ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், நீதிமன்ற விசாரணை இன்றி வீடுகளை இடிப்பது சட்டத்திற்குப் புறம்பானது. போதைப் பொருள் கடத்தல் காரர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமே தவிர, அவர்களது குடும்பத்தினர் வசிக்கும் வீடுகளை இடிப்பது முறையான செயல் அல்ல” என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version