குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் 39 வயது மீன்பிடி தொழிலாளி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 16 வயது மகள் ஒருவர் மங்களூரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
தற்போது விடுமுறை என்பதால் மாணவி சொந்த ஊரில் தங்கி இருந்தார். இந்த நிலையில் சம்பவ தினம் வீட்டில் இருந்த மகளை காணவில்லை. அதிர்ச்சியடைந்த தந்தை உடனடியாக மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கு இடையில் நேற்று முன்தினம் கேரள மாநிலம் கொல்லம் ரயில் நிலையத்தில் சிறுமி ஒருவர் தனியாக சுற்றி திரிவதை கண்ட போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது சிறுமி குழித்துறையில் உள்ளவர் என்பது தெரியவந்து. உடனடியாக மார்த்தாண்டம் போலீசாருக்கு கேரளா போலீசார் தகவல் அளித்தனர்.
இதன் பேரில் உடனே கேரளாவுக்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டு மார்த்தாண்டம் அழைத்து வந்தனர். விசாரணையில் தந்தை திட்டியதால் மாணவி கோபித்துக் கொண்டு வெளியேறி இருப்பதாக தெரியவந்துள்ளது. போலீசார் மாணவிக்கு அறிவுரை கூறி தந்தையிடம் ஒப்படைத்தனர்.