பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கியத் தளபதியான பிலால் ஆரிப் சராபி சனிக்கிழமை ஈத் தொழுகைக்குப் பிறகு அவரது குடும்ப உறுப்பினர்களாலேயே கத்தியால் குத்தப்பட்டும், துப்பாக்கியால் சுடப்பட்டும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முரிட்கே பகுதியில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உருக்குலைந்த தலைமையகத்திற்கு அருகிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குடும்பத் தகராறு காரணமா ?: இந்தக் கொலைக்கான துல்லியமான காரணம் இன்னும் வெளிவராத நிலையில், இது சொந்த குடும்பத் தகராறால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொலையில் தொடர்புடைய நபர்களைப் பாகிஸ்தான் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிரவாதி சராபி உயிரிழந்து கிடக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தாலும், அதன் நம்பகத்தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
பிலால் ஆரிப் சராபி, முரிட்கே மையத்தில் இளைஞர்களை தீவிரவாத பாதையில் திருப்புவதையும், அவர்களுக்குத் தீவிரவாதக் கொள்கைகளைப் போதித்து மூளைச்சலவை செய்வதையும் வாடிக்கையாக வைத்திருந்தார். எனினும், இவர் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.













