சென்னை கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கண்மணி. இவரது மனைவி ஜூலினா (43). இவரது சகோதரர்கள் 2 பேர் குமரி மாவட்டம் சைமன் காலனி, மண்டைக்காடு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். சகோதரர் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜூலினா கடந்த சில நாட்களுக்கு முன்பு சகோதரர்கள் வீட்டிற்குத் தனது மகன் மற்றும் மகளுடன் வந்துள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பின்னர் மண்டைக்காடு கார் விளையில் வசிக்கும் மற்றொரு சகோதரர் வீட்டுக்குச் சென்றுள்ளனர். நேற்று (ஏப்ரல் 3) ஜூலினாவின் 21 வயது மகள் வீட்டின் மேல் பகுதியில் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த திங்கள்நகர் பகுதியைச் சேர்ந்த சகாய ஜெங்கின்ஸ் (41) என்ற கொத்தனார் ஆபாச செயலில் ஈடுபட்டதாகப் புலப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் ஓடிச் சென்று தனது தாயாரிடம் கூறினார். அவர் அங்குச் சென்று பார்த்தபோது ஆபாச செயலில் ஈடுபட்ட கொத்தனார் சகாய ஜெங்கின்ஸ் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து குளச்சல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். குளச்சல் போலீசார் வழக்குப் பதிவு செய்து மறைவான கொத்தனாரைத் தேடி வருகின்றனர். தலைமறைவான கொத்தனாருக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.