கொல்லங்கோடு நகராட்சி 6-ம் வார்டிற்குட்பட்ட முதியவர் வீட்டின் மேல் விழுந்த மரக்கிளையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொல்லங்கோடு நகராட்சி காங். கவுன்சிலர் கவிதா மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது: – கொல்லங்கோடு நகராட்சி ஆறாவது வார்டில் நெல்லியப்பட்டுவிளை என்னுமிடத்தில் வசித்து வருபவர் சுரேந்திரன் (75), இவரது ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீட்டில் கடந்த 23ம் தேதி சூறாவளிக்காற்றுடன் மழை பெய்த போது, அந்த நிலத்தில் வீட்டின் பின்புறம் நின்ற பலா மரம் சரிந்து விழுந்ததில் மரக்கிளைகள் சுரேந்திரன் வீட்டின் மேல் பகுதியில் விழுந்து வீட்டின் மேற்கூரை முழுவதும் சேதமடைந்துள்ளது. எனவே வீட்டின் மேல் உள்ள மரக்கிளைகளை அகற்ற சென்றபோது நிலம் சம்பந்தமான வழக்கு உள்ளது என்று, மரக்கிளைகளை அகற்றுவதை தடுத்துள்ளனர். வீட்டின் மேல் உள்ள மரக்கிளைகளை அகற்றி கூரையை சரிசெய்யாமல், சேதமடைந்த வீட்டில் ஆட்கள் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இயற்கைச் சீற்றத்தின் போது விழுந்த மரக்கிளையை அகற்றுவது நீதிமன்ற வழக்கை எவ்விதத்திலும் பாதிக்காது. ஆகவே மாவட்ட ஆட்சியர் நேரடி கவனம் செலுத்தி வருவாய் துறையினர் மூலம் சுரேந்திரன் வீட்டின் மேல் பகுதியில் கிடக்கும் மரக்கிளையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.














