கொல்லங்கோடு காவல் நிலையம் அருகில் கனரா வங்கி மற்றும் ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம்மில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் புகுந்து உடைத்துள்ளனர். இது தொடர்பாக தகவல் வங்கியின் டெல்லி தலைமை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு சென்றுள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்கள் ஏடிஎம்மில் சென்று பார்த்துள்ளனர். அப்போது ஏடிஎம் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்திருப்பது தெரிய வந்தது. அதேவேளை பணம் ஏதுவும் திருட்டு போகவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து ஊழியர்கள் ஏடிஎம் மையத்தில் ஆட்கள் போகாதவாறு ஷட்டரை அடைத்து பூட்டினர்.
இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலையம் அருகே உள்ள ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.