கருங்கல் அருகே உள்ள திப்பிரமலை பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் மகன் சுபின். இவரது சகோதரியை அதே பகுதியை சேர்ந்த கதிரவன் (34) என்பவர் சகோதரர் திருமணம் செய்திருந்தார். கணவன் மனைவி தகராறு காரணமாக இருதரப்பினருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி சுபினின் தங்கையின் கணவர் குடும்பத்தினர்கள் தகராறு செய்ததை தட்டிக் கேட்க சுபின், அவரது தந்தை மகேஸ்வரன் ஆகியோர் இரவு சென்றுள்ளனர். அப்போது தகராறு ஏற்பட்டு, சுபினின் தாடையை கதிரவன் கடித்துத் துப்பி விட்டார். மகேஸ்வரனை அடித்து காயப்படுத்தியுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் கருங்கல் போலீசார் கதிரவன் மீது வழக்குப் பதிவு செய்து, வழக்கு விசாரணை இரணியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
நேற்று நீதிபதி அமர்வின் போது சுபினின் தாடையைக் கடித்து காயப்படுத்திய கதிரவனுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், மகேஸ்வரனை காயப்படுத்தியதற்காக ஒரு வருட சிறைத்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. கதிரவன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.