இந்தியா - மலேசியா இடையே 11 ஒப்பந்தம்: பிரதமர் மோடி, அன்வர் இப்ராகிம் முன்னிலையில் கையெழுத்து

0
8

பிரதமர் மோடி, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் முன்னிலையில் இரு நாடுகள் இடையே 11 முக்கிய ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின.

பிரதமர் மோடி 2 நாள் அரசு முறைப் பயணமாக மலேசியா சென்றுள்ளார். தலைநகர் கோலாலம்பூரில் நேற்று முன்தினம் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற கூட்டத்தில் பேசினார்.

இரண்டாம் நாளான நேற்று கோலாலம்பூரில் உள்ள பெர்தானா புத்ராவில் (மலேசிய பிரதமர் அலுவலகம்) அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அவர்கள் முன்னிலையில் இரு நாடுகள் இடையே 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

குறிப்பாக பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், செமி கண்டக்டர் உற்பத்தி, பேரிடர் மேலாண்மை, ஊழல் தடுப்பு நடைமுறைகள், புலிகள் பாதுகாப்பு, ஐ.நா. அமைதிப் படைக்கு பங்களிப்பது உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்றுவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மலேசியாவில் வள்ளுவர் மையம்: கோலாலம்பூரில் செயல்படும் மலேசிய பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் மையம் அமைக்கப்படும். மலேசிய மாணவர்களுக்கு திருவள்ளுவர் கல்விஉதவித் தொகை வழங்கப்படும். இந்தியாவின் யுபிஐ, மலேசியாவின் பேநெட் பணப் பரிமாற்ற நடைமுறைகள் ஒன்றிணைக்கப்படும், ஆயுர்வேத ஆராய்ச்சியில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும். மலேசியாவின் சாபா பகுதியில் புதிதாக இந்தியதூதரகம் திறக்கப்படும் ஆகிய 5 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவையும் மலேசியாவையும் தமிழ் மொழி இணைக்கிறது. மலேசியாவின் கல்வி, ஊடகம், கலாச்சாரத்தில் தமிழ்மொழி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது இந்தியா, மலேசியா இடையே தமிழ் மொழி திரைப்படங்கள், இசை தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. தீவிரவாதத்தை எதிர்ப்பதில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

பாதுகாப்பு துறையைப் பொருத்தவரை தீவிரவாத தடுப்புநடவடிக்கைகள், உளவுத் துறைதகவல்கள், கடல்சார் பாதுகாப்புசார்ந்த தகவல்களை இரு நாடுகளும் பரஸ்பரம் பரிமாறி கொள்கின்றன. எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், பயோடெக், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளிலும் இந்தியாவும் மலேசியாவும் இணைந்து செயல்படுகின்றன. மலேசியாவின் சபா மகாண தலைநகர் கோத்தா கினபாலு நகரில் விரைவில் இந்திய தூதரகம் திறக்கப்படும். இவ்வாறு மோடி பேசினார்.

மலேசிய பிரதமர் அன்வர் பேசியபோது, ‘‘பொருளாதார வளர்ச்சியில் புதிய உச்சங்களை தொட்டு வரும் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதில் பெருமிதம் கொள்கிறோம். கடந்த 2025-ம் ஆண்டில் இரு நாடுகள் இடையிலான வர்த்தகம் 18.59 பில்லியன் டாலரை தாண்டியது.

உக்ரைன்- ரஷ்யா போர், மத்திய கிழக்கு விவகாரம் ஆகியவற்றில் அமைதியை ஏற்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் மோடியை பாராட்டுகிறேன். இந்தியாவும் மலேசியாவும் உள்நாட்டு கரன்சியில் வர்த்தகம் மேற்கொள்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது இரு நாடுகள் இடையிலான பொருளாதாரத்தில் முக்கிய மைல் கல்லாக அமையும்’’ என்றார்.

விருந்தில் ‘நாளை நமதே’ பிரதமர் மோடிக்கு மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் நேற்று மதிய விருந்து அளித்தார். அப்போது எம்ஜிஆர் நடித்த ‘நாளை நமதே’ திரைப்படத்தில் இருந்து ‘நாளை நமதே’ பாடல் இசைக்கப்பட்டது. பாடலுக்கு ஏற்ப கலைஞர்கள் நடனம் ஆடினர். மோடி, அன்வர் இப்ராகிமும் பாடலை ரசித்து கேட்டனர். இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

‘அன்வர்.. எம்ஜிஆர் ரசிகர்’ – எனது நண்பரான பிரதமர் அன்வர் இப்ராகிம் அளித்த மதிய விருந்தில் பாடல்கள் பாடப்பட்டன. மகத்தான மனிதர் எம்ஜிஆர் நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாளை நமதே’ என்ற பாடலும் அதில் இடம்பெற்றது. இந்தியாவில் உள்ள நம்மில் பலரைப் போலவே மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமும் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் ஆவார். இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here