நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 301 ரன்கள் இலக்கை இந்திய அணி போராடி வெற்றி பெற்றது.
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
பேட்டிங்கை தொடங்கிய நியூஸிலாந்து அணிக்கு டெவன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ் ஜோடி நிலைத்து நின்று விளையாடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. ஹென்றி நிக்கோல்ஸ் 60 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் தனது 16-வது அரை சதத்தை கடந்தார். மறுபுறம் டெவன் கான்வே 60 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் தனது 6-வது அரை சதத்தை அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 21.4 ஓவர்களில் 117 ரன்கள் குவித்த இந்த ஜோடியை ஹர்ஷித் ராணா பிரித்தார்.
சிறப்பாக விளையாடி வந்த ஹென்றி நிக்கோல்ஸ் 69 பந்துகளில், 62 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்ஷித் ராணா வீசிய வைடு யார்க்கர் பந்தை அடித்த போது மட்டை விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலிடம் கேட்ச் ஆனது. ஹர்ஷித் ராணா தனது அடுத்த ஓவரில் டெவன் கான்வேவை போல்டாக்கினார். டெவன் கான்வே 67 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து களமிறங்கிய வில் யங் 12 ரன்களில் மொகமது சிராஜ் பந்திலும், கிளென் பிலிப்ஸ் 12 ரன்களில் குல்தீப் யாதவ் பந்திலும் நடையை கட்டினர்.
நடுவரிசையில் அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்த போதிலும் டேரில் மிட்செல் அதிரடியாக விளையாடினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய மிட்செல் ஹே 18, கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 16, ஜாக் ஃபோக்ஸ் 1 ரன்னில் வெளியேறினர். தனது 12-வது அரை சதத்தை அடித்த டேரில் மிட்செல் 71 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
இறுதிக்கட்ட ஓவர்களில் கிறிஸ்டியன் கிளார்க் 17 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன 24 ரன்களும், கைல் ஜேமிசன் 8 ரன்களும் சேர்க்க 50 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் மொகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். குல்தீப் யாதவ் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து 301 ரன்கள் இலக்குடன் இந்திய அணி பேட் செய்தது. தொடக்க வீரரான ரோஹித் சர்மா 29 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் கைல் ஜேமிசன் பந்தில் மிட் ஆஃப் திசையில் நின்ற மைக்கேல் பிரேஸ்வெலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஜோடி 8.4 ஓவர்களில் 39 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து களமிறங்கிய விராட் கோலி விரைவாக ரன்கள் சேர்த்தார். இதனால் இந்திய அணி 16.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. தனது 16-வது அரை சதத்தை கடந்த கேப்டன் ஷுப்மன் கில் 71 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆதித்யா அசோக் பந்தில் கவர் திசையில் நின்ற கிளென் பிலிப்ஸிடம் பிடிகொடுத்து வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு ஷுப்மன் கில், விராட் கோலி ஜோடி 118 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர், விராட் கோலியுடன் இணைந்து விரைவாக ரன்கள் சேர்த்து நியூஸிலாந்து அணிக்கு அழுத்தம் கொடுத்தார். அபாரமாக விளையாடிய விராட் கோலி சதத்தை நெருங்கிய நிலையில் ஆட்டமிழந்தார்.
91 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் விளாசிய விராட் கோலி, கைல் ஜேமிசன் வீசிய பந்தை கிரீஸை விட்டு வெளியே வந்து மிட் ஆஃப் திசையில் விளாசிய போது மைக்கேல் பிரேஸ்வெலிடம் கேட்ச் ஆனது. 3-வது விக்கெட்டுக்கு விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி 77 ரன்கள் சேர்த்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 4 ரன்களில் கைல் ஜேமிசன் பந்தில் நடையை கட்டினார். கடைசி 10 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 62 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் கே.எல்.ராகுல் களமிறங்கினார்.சீராக ரன்கள் சேர்த்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் 47 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்த நிலையில் கைல் ஜேமிசன் வீசிய ஆஃப் கட்டரில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். 8 ரன்கள் இடைவெளியில் கைல் ஜேமிசன் வீழ்த்திய இந்த 3 விக்கெட்களால் இந்திய அணியின் பக்கம் நெருக்கடி திரும்பியது.
6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹர்ஷித் ராணா மட்டையை சுழற்றினார். கிறிஸ்டியன் கிளார்க் வீசிய 45-வது ஓவரின் கடைசி பந்தை ஹர்ஷித் ராணா சிக்ஸருக்கு விளாசினார். கடைசி 5 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவையாக இருந்தன. மைக்கேல் பிரேஸ்வெல் வீசிய அடுத்த ஓவரில் 8 ரன்கள் சேர்க்கப்பட்டன. கிறிஸ்டியன் கிளார்க் வீசிய 47-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஹர்ஷித் ராணா அடுத்த பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
23 பந்துகளை சந்தித்த ஹர்ஷித் ராணா ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் சேர்த்தார். அவர், ஆட்டமிழந்த போது அணியின் வெற்றிக்கு 23 பந்துகளில், 22 ரன்கள் தேவையாக இருந்தன. இதையடுத்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். இந்த ஓவரில் எஞ்சிய 4 பந்துகளிலும் தலா ஒரு ரன் சேர்க்கப்பட்டது. ஜாக் ஃபோல்க்ஸ் வீசிய 48-வது ஓவரில் 6 ரன்கள் எடுக்கப்பட்டன. கடைசி 2 ஓவர்களில் 12 ரன்கள் தேவையாக இருந்தன.
கிறிஸ்டியன் கிளார்க் வீசிய 49-வது ஓவரின் முதல் 3 பந்துகளில் 3 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் 4-வது பந்தை கே.எல்.ராகுல் ஸ்கூப் ஷாட் மூலம் பைன் லெக்திசையில் பவுண்டரி விளாசினார். தொடர்ந்து தாழ்வாக வீசப்பட்ட புல்டாஸை பந்தை கவர் திசையில் பவுண்டரியாக மாற்றி அசத்தினார் கே.எல்.ராகுல். கடைசி பந்தை கே.எல்.ராகுல் சிக்ஸருக்கு பறக்கவிட இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கே.எல்.ராகுல் 21 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 29 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 7 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது போட்டி வரும் 14-ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.



