சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை கடற்கரைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்க முடியாது. சிலைகளை வேறு இடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை யொட்டி, நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதால் மாசு ஏற்படுகிறது. அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரி சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் கடந்த 2023-ம் ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, தீர்ப்பாய அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் பிரசாந்த் கார்கவாஹ ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது 38 மாவட்ட ஆட்சியர்கள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில், ‘பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்யப்பட்ட சிலைகள் விற்பனையை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுசம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர், பட்டினப்பாக்கம், நீலாங்கரை ஆகிய கடற்கரைகள் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன’ என கூறப்பட்டிருந்தது.
பட்டினப்பாக்கம், நீலாங்கரை ஆகிய கடற்கரைகளில் ஆமைகள் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. மேலும், இப்பகுதிகள் கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்- 1 பகுதியாக உள்ளதால், அங்கு சிலைகளை கரைக்க அனுமதிக்கக் கூடாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட தீர்ப்பாய உறுப்பினர்கள், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை பகுதிகளுக்கு செல்லும் சிலைகளை மற்ற பகுதிகளுக்கு ஏன் மாற்றிவிடக் கூடாது என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், “மற்ற பகுதிகளுக்கு மாற்றுவதை பொறுத்தவரை, சட்டம் ஒழுங்கு, கூட்ட நெரிசல், மத ரீதியாக பதற்றமான பகுதிகள் ஆகியவற்றை கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது.
இதுசம்பந்தமாக அதிகாரிகளுடன் கலந்து பேசி, முடிவை தெரவிக்க அவகாசம் வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாய அமர்வு உறுப்பினர்கள், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நீலாங்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் சிலைகளை கரைக்க அனுமதிக்க முடியாது.
இந்த 2 இடங்களிலும் கரைக்கப்படும் சிலைகளை மற்ற 4 இடங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தி, அரசின் கருத்தை அறிந்து செப்.16-ம் தேதி தெரிவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர்.
