“தேவை என்று வரும்போது கேட்பதற்கு கூச்சப்படக் கூடாது” என்று மாணவர்களுக்கு நடிகர் பிரதீப் ரங்கநாதன் அறிவுரை வழங்கினார்.
சென்னையில் தனியார் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசும்போது, ”எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பேன். அதற்காக வருத்தப்பட தேவையில்லை. நிகழ்ச்சியில் ஆடுவது 10-20 பேர் மட்டுமே, ஆனால் பார்வையாளர்கள்தான் அதிகம்.
கலை விழா என்பது பார்வையாளர்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும்போது, வாழ்க்கையில் ஒரு சந்தர்ப்பம் வரும், அதற்குப் பிறகு இந்த உலகமே நம்மை வேடிக்கை பார்க்கும். அந்த சந்தர்ப்பம் வரும் வரை நாம் ஜாலியாக மற்றவர்களை வேடிக்கை பார்ப்போம். வேடிக்கை பார்ப்பதற்காகத் தான் இந்த வாழ்க்கையே.
வாழ்க்கையே ரொம்ப சிறியதுதான். முக்கியமாக தேவை என்றால் கேட்பதற்கு கூச்சப்படாதீர்கள். ஒருவேளை கேட்டு ‘நோ’ என்று பதில் வந்தால் எதுவுமே ஆகப் போவது இல்லை. ஆனால், நாம் கேட்டு நடப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அதுதான் முக்கியம்” என்று பேசினார் பிரதீப் ரங்கநாதன்.








