ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெறுகிறது. இதில் 12 அணிகள் கலந்து கொள்கின்றன. 24 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 33 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. தொடக்க ஆட்டத்தில் ஜூன் 12-ம் தேதி இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் பர்மிங்காமில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான பரிசுத் தொகையை நேற்று ஐசிசி அறிவித்தது. மொத்த பரிசுத் தொகை ரூ.82 கோடியாகும். இது 2024-ம் ஆண்டு வழங்கப்பட்ட தொகையைவிட 10 சதவீதம் அதிகமாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.21.8 கோடி வழங்கப்படும்.
2-வது இடம் பிடிக்கும் அணி ரூ.10 கோடியை பெறும். அரை இறுதியில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா ரூ.6.29 கோடி வழங்கப்படும். லீக் சுற்றில் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.29 லட்சம் வழங்கப்படும். டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் குறைந்தபட்சம் ரூ.2.06 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.














