கனமழை: நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

0
428

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.27) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் ஒத்திவைப்பு: கனமழை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 130 கல்லூரிகளில் இன்று (நவ.26) நடைபெறவிருந்து பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான சுற்றறிக்கையை பல்கலைக்கழக பதிவாளர் கல்லூரிகளுக்கு அனுப்பிவைத்துள்ளார். இன்று நடைபெறவிருந்த தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகைக்கு தெற்கு, தென் கிழக்கில் 630 கிமீ தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கில் 830 கிமீ தொலைவிலும் நிலவுகிறது. இது மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் இது ஆழ்ந்த கற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஏற்கெனவே டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதற்கிடையில் வேதாரண்யம் பகுதியில் 50 மீட்டர் தூரத்துக்கு கடல் உள்வாங்கியுள்ளது.

பரவலாக மழை.. முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இன்றும், நாளையும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், நவ.28 முதல் டிச.1-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று (நவ.26) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கனமழை காரணமாக நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.27) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here