ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி. இந்திய வெற்றி குறித்து இந்திய அணி வீராங்கனைகள் தெரிவித்தது:
ஸ்மிருதி மந்தனா: இந்த தருணத்தை மறக்கவே முடியாது. இன்னும் 45 நாட்களுக்கு எனக்கு இந்த நினைவுகள் இருக்கும். 45 நாள் வரை ஒவ்வொரு இரவும் தூங்காமலேயே இந்த இனிமையான நினைவுகளுடன் இருப்பேன். உலக சாம்பியனாக மாறிய பின்னர் அந்த உணர்வை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை.
அமன்ஜோத் கவுர்: வோல்வார்ட்டின் கேட்ச் எவ்வளவு முக்கியமானது என்பது கிரிக்கெட் விளையாடும் அனைவருக்கும் தெரியும். என் வாழ்க்கையில் முதல் முறையாக நான் தடுமாறினேன், எனக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. அவ்வளவுதான், அதை சரியாகப் பயன்படுத்தினேன். நாங்கள் வரலாற்றை படைத்துள்ளோம். இது ஒரு ஆரம்பம்தான். இந்திய கிரிக்கெட்டை நாங்கள் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வோம். உலகம் முழுவதும் கிரிக்கெட்டின் ஒவ்வொரு வடிவத்திலும் நாங்கள் ஆதிக்கம் செலுத்த உள்ளோம். எனக்கு உறுதுணையாக இருந்த எனது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றி.
ரிச்சா கோஷ்: எங்களுக்கு, இந்த வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாங்கள் நீண்ட காலமாக உலகக் கோப்பையைக் கைப்பற்றக் காத்திருந்தோம். சாம்பியன் பட்டம் வென்று எப்போது கைகளில் கோப்பையை உயர்த்துவோம் என்ற உணர்வு நீண்டு கொண்டே இருந்தது. அந்தக் கனவு நிறைவேறி விட்டது. எப்படியாவது வெற்றிக் கோட்டை கடப்பதில் உறுதியாக இருந்தோம். இறுதிப் போட்டியின்போது எங்களுக்கு அதிக அளவில் அழுத்தம் இருந்தது.
பிரதிகா ராவல்: நான் இந்த அணியின் ஒரு பகுதியாக இருந்ததில் மிகவும் மகிழ்ச்சி யடைகிறேன். இது வரலாற்று வெற்றி. இதை வெளிப்படுத்த நிச்சயம் வார்த்தைகள் இல்லை. நமது நாட்டின் தேசியக் கொடியை எனது தோள்களில் ஏந்தி நிற்கிறேன். இது எனக்கு அதிக அர்த்தத்தைக் கொண்டு வருகிறது. நீண்ட காலத்துக்குப் பிறகு உலகக் கோப்பையை வென்ற முதல் அணி நாங்கள். முழு இந்தியாவும் இதற்கு தகுதியானது. மிகவும் நேர்மையாகச் சொன்னால், வெளியே உட்கார்ந்து போட்டியைப் பார்ப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. காயம் காரணமாக நான் வெளியே அமர வேண்டியதாகிவிட்டது.
            













