கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி கத்தார் ஏர்வேஸ் விமானம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து கொழும்புவுக்கு புறப்பட்டது.
அதில், 85 வயதான அசோகா ஜெயவீரா என்பவர் பயணம் செய்தார். இவர் தெற்கு கலிபோர்னியாவில் இதயவியல் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து கொழும்பு செல்ல 15 மணி நேரமாகும். பயணத்தின் போது சைவ உணவு வழங்க வேண்டும் என்று டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், சைவ உணவு இல்லை. அசைவ உணவுதான் இருக்கிறது. அதை சாப்பிடுங்கள் என்று விமான பணிப்பெண் கூறியிருக்கிறார். வேறு வழியின்றி அதை வாங்கி சாப்பிட்ட அசோகா ஜெயவீராவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு விமான பணிப்பெண்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். எனினும், அசோகா உயிரிழந்தார்.
இந்நிலையில், அசோகாவின் மகன் சூர்யா ஜெயவீரா 1,28,821 டாலர் இழப்பீடு கேட்டு கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.