Home உலக செய்திகள் MH 370 விமானத்தை தேடும் பணியை நீட்டிக்க மலேசிய அரசுக்கு பயணிகளின் குடும்பத்தினர் வலியுறுத்தல்

MH 370 விமானத்தை தேடும் பணியை நீட்டிக்க மலேசிய அரசுக்கு பயணிகளின் குடும்பத்தினர் வலியுறுத்தல்

0

கடந்த 2014-ல் 227 பயணிகள் மற்றும் 12 விமானக் குழுவினருடன் மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.எச்-370 விமானத்தை தேடும் பணியை நீட்டிக்க வேண்டுமென மலேசிய அரசுக்கு பயணிகளின் குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

2014-ல் இதே நாளில் (மாதம் 8) மலேசியாவிலிருந்து சீனாவின் பெய்ஜிங்கிற்கு புறப்பட்ட போயிங் 777 ரகத்தை சேர்நத் எம்.எச்-370 விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் காணாமல் போனது. இதனைத் தொடர்ந்து சர்வதேச நாடுகளின் கடற்படைகளும், விமானப் படைகளும் அந்த விமானத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. இருப்பினும் விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த விமானத்தை தேடும் பணியை அமெரிக்காவை சேர்ந்த ஆழ்கடல் ஆய்வு நிறுவனமான ‘ஓசியன் இன்ஃபினிட்டி’ நிறுவனம், மலேசிய அரசுடனான ஓப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. மாயமான விமானத்தை தேடும் பணியானது வானிலை சூழல், ஒப்பந்த விவகாரம் உள்ளிட்ட காரணங்களால் இடைநிறுத்தப்பட்டு, மீண்டும் தொடங்கியது உண்டு.

இந்த சூழலில் விமானம் மாயமாகி 12 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் குடும்பத்தினர் இணைந்து நிறுவியுள்ள ‘வாய்ஸ் 370’ குழு, தேடுதல் பணியை மலேசிய அரசு நீட்டிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளது. ஓசியன் இன்ஃபினிட்டி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மலேசிய அரசு நீட்டிக்க வேண்டும். வரும் ஜூன் மாதத்துடன் இந்த ஒப்பந்தம் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வரும் விதிமுறைகளையின் அடிப்படையில் ஒப்பந்தத்தை நீட்டிக்கலாம் என அந்த குழு அரசுக்கு தெரிவித்துள்ளது.

விமானத்தின் நிலை என்ன? – மாயமான அந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கியதா, நிலத்தில் விழுந்ததா, மலைப் பகுதியில் நொறுங்கியதா என்ற எந்த உறுதியான தகவலும் இதுவரை தெரியவில்லை. விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து சமிக்ஞை ஏதும் வெளியாகததால் விமானத்தை கண்டுபிடிப்பது மிகுந்த சிரமத்துக்குள்ளாகியது.

இந்த நிலையில் எம்.எச்-370 விமானம் கட்டுப்பாட்டை இழந்து இந்தியப் பெருங்கடலுள் விழுந்திருக்கலாம் என்று 2016-ம் ஆண்டு கூறப்பட்டது. இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலிருந்து விமானத்தின் இறக்கைகளும் கைப்பற்றப்பட்டன. எனினும் விமானத்தைக் கண்டறிய முடியவில்லை.

எம்.எச்-370 விமானத்தைக் கண்டுபிடிப்பது சிரமமானது என்று தேடுதலில் ஈடுபட்டு வந்த ஆஸ்திரேலிய, மலேசிய, சீன அதிகாரிகள் 2017-ம் ஆண்டு அறிக்கை வெளியிட்டனர்.

இதனைத் தொடர்ந்து விமானத்தைத் தேடும் பணியில் ‘No Find, No Fee’ என்ற கொள்கை புரிதலின் அடிப்படையில் ஓசியன் இன்ஃபினிட்டி நிறுவனம் தேடி வருகிறது. மாயமான விமானத்தில் சுமார் 239 பேர் பயணம் செய்திருந்தனர். இவர்களின் நிலைமை என்னவென்பது 12 ஆண்டுகளான நிலையில் இன்னும் அறியப்படாதது மலேசிய மக்களிடத்தில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version