Home மாநில செய்திகள் முதுநிலை மருத்துவ படிப்புகளில் என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் சேருவதற்காக போலி தூதரக சான்றிதழ்: 46 மருத்துவர்கள் மீது...

முதுநிலை மருத்துவ படிப்புகளில் என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் சேருவதற்காக போலி தூதரக சான்றிதழ்: 46 மருத்துவர்கள் மீது புகார்

0

முதுநிலை மருத்துவ படிப்புகளில் என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் சேருவதற்காக போலி தூதரக சான்றிதழ் அளித்த 46 மருத்துவர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இருக்கும் 2,294 இடங்கள், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவர் சேர்க்கை குழுவின் மூலம் நிரப்பப்படுகிறது. அவற்றில் 1,094 இடங்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மீதமுள்ள 50 சதவீதம், எம்பிபிஎஸ் படித்த, அரசுப் பணியில் இல்லாதவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. தனியார் மருத்துவ கல்லூரியில் உள்ள முதுகலைப் படிப்புகளில் வெளிநாட்டு வாழ் இந்தியர் (என்ஆர்ஐ) ஒதுக்கீட்டில் 89 இடங்கள் உள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 8,182 மருத்துவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 4,139 மருத்துவர்களும் என மொத்தம் 12,321 மருத்துவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களில் 446 மருத்துவர்கள் என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் இடங்களை பெறுவதற்கு விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் 223 மருத்துவர்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. விண்ணப்பத்தில் சான்றிதழ்கள் முழுமையாக சமர்ப்பிக்காத 221 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் முதுகலை மருத்துவ படிப்புகளில் என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் சேருவதற்கு 46 மருத்துவர்கள் போலியாக தூதரக சான்றிதழ்களை சமர்ப்பித்திருந்தது கண்டறியப்பட்டது. அந்த 46 மருத்துவர்கள் மீது காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் மருத்துவர்களின் விவரங்கள், தூதரகத்தில் பெறப்பட்ட போலி சான்றிதழ்களும் இணைத்து அளிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கைக் குழு செயலாளர் அருணா லதா தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version