பொது செயலாளராக இபிஎஸ் தேர்வானது குறித்து விசாரிக்க கூடாது: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

0
299

அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வானது குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளில் தீர்வு காணும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை கடந்த டிச.4-ம் தேதி விசாரித்த உயர் நீதிமன்றம், சூரியமூர்த்தியின் மனு மீது தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்றும், அப்போது பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர்கள் என அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு ஒரு முடிவுக்கு வர வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்கக் கூடாது எனக் கோரி முன்னாள் எம்.பி.க்களான ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் கே.சி.பழனிசாமி ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தனர். இதேபோல பெங்களூரு வா.புகழேந்தி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சூரியமூர்த்தி, காந்தி, ராமச்சந்திரன் ஆகியோரும் இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும், அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது எனக் கூறியும் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். இந்த மனுக்களின் அடிப்படையிலும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வானது குறித்து தேர்தல் ஆணையம் விசாரிப்பதற்கு தடை விதிக்கக்கோரி அதிமுக பொதுச் செயலாளரான பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்ரமணியன், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது பழனிசாமி தரப்பில் ஆஜரான டெல்லி மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம், தற்போது அதிமுகவில் உறுப்பினர்களாக இல்லாத தனிப்பட்ட நபர்கள் கட்சி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனுக்களை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்றார். அதை தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலனும் ஆமோதித்தார். தேர்தல் ஆணையத்தின் இந்த நிலைப்பாட்டுக்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்பதை ஏற்கெனவே சொல்லியிருக்க வேண்டியதுதானே என தெரிவித்தனர்.

பின்னர் அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே உரிமையியல் வழக்குகள் தொடரப்பட்டு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் சூழலில், இதே விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் அதிமுக பொதுச் செயலாளர் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த விசாரணையும் நடத்தக்கூடாது என இடைக்கால தடை விதித்தனர். மேலும், இதுதொடர்பாக வரும் ஜன.27-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here