ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, ஆண்டுதோறும் பிப்ரவரி 8 அன்று விமானப் படைத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தும் மரபை கைவிட்டுள்ளார்.
ஈரானில் முன்பு இருந்த மன்னராட்சியை வீழ்த்துவதற்காக 1979, பிப்ரவரி 8-ம் தேதி விமானப்படை அதிகாரிகள் குழு, ரூஹோல்லோ கோமேனிக்கு விசுவாசமாக இருப்பது என சத்தியப் பிரமாணம் எடுத்தனர். இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 8-ம் தேதி, ஈரான் உச்சத் தலைவர், விமானப் படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம்.
தற்போதைய உச்சத் தலைவரான அயதுல்லா அலி கமேனி, ஈரான் உச்சத் தலைவர் பொறுப்பை ஏற்ற 1989 முதல் இந்த மரபை பின்பற்றி வந்துள்ளார். கரோனா காலகட்டத்தில்கூட இந்த மரபு பின்பற்றப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், முதல் முறையாக இந்த ஆண்டு இந்த மரபை உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கைவிட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி அப்துல் ரஹீம் மவுசவி, பிப்ரவரி 8-ம் தேதி விமானப் படைத் தளபதிகளைச் சந்தித்துள்ளார். ஈரான் இண்டர்நேஷ்னல் எனும் இதழ் இதனை தெரிவித்துள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருவதால், இந்தச் சந்திப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, தன்னை தற்காத்துக்கொள்வதற்காக அல்லது தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் தீவிரமாக இருப்பதன் காரணமாக இந்த மரபு கைவிடப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
ஈரான் மீது எந்த தாக்குதல் நிகழ்ந்தாலும் அது மத்திய கிழக்கு முழுவதும ஒரு பரந்த மோதலை தூண்டும் என்று அமெரிக்காவை ஈரான் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும், ஈரான் மீது தாக்குதலை தொடுப்பதற்கான நகர்வை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. ஈரானில் உள்ள அமெரிக்கர்கள், பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேற அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்தது.
மேலும், யுஎஸ்எஸ் அபிரஹாம் லிங்கன் என்ற விமானம் தாங்கி போர் கப்பலை, கடந்த மாத இறுதியில் அரபிக் கடலுக்கு அனுப்பியது. மேலும், ஜோர்டானில் உள்ள விமானப் படைத் தளத்துக்கு பன்னிரெண்டு எஃப் 15 ரக போர் விமானங்கள், ஒரு எம்.க்யூ-9 ஆளில்லா விமானம், தரத் தாக்குதல் விமானங்கள் ஆகியவற்றை அமெரிக்கா அனுப்பி உள்ளது. இதனால், ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை தொடுக்கலாம் என அஞ்சப்படுகிறது.



