மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் தோல்வியைதொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் (டிஎம்சி) எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 80 எம்எல்ஏக்களில் 60 பேர் தனி அணியாக பிரிந்து எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றனர். இதேபோல் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் 20 மக்களவை எம்.பி.க்கள் தனி அணியாக செயல்பட முடிவு செய்தனர்.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வரும் இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியுடன் (என்சிபிஐ) இணைந்து செயல்பட திரிணமூல் காங்கிரஸின் 20 எம்.பி.க்களும் முடிவு செய்தனர். அதன்படி நேற்று என்சிபிஐ கட்சியுடன் அதிருப்தி திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 20 பேரும் அதிகாரப்பூர்வமாக தங்களை இணைத்துக் கொண்டனர். கட்சித் தாவல் சட்டத்தின்கீழ் பதவி பறிக்கப்படுவதைத் தடுக்க இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர்.
இதையடுத்து அந்தக் கட்சியின் மக்களவை தலைவராக ககோலி கோஷ் தாஸ்திதார் இருப்பார். அவரே என்சிபிஐ கட்சியின் தலைவராகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் என்சிபிஐ கட்சியுடன், அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேர் இணைந்த விவகாரத்தை கடிதமாகக் கொடுத்துள்ளனர்.
தங்களை அதிகாரப்பூர்வமாக என்சிபிஐ கட்சியாக மக்களவையில் அங்கீகரிக்க வேண்டும் என்றும் மக்களவையில் தங்களுக்கென தனி இடம் ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.















