முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களில் இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான ராமேஷ்வரப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை 7 மணியில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.
அதேபோல், செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணியின் மூர்த்திபாளையத்தில் உள்ள வீடு, கோயம்பள்ளியில் உள்ள திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர் வீடு, கோதை நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கார்த்திக் மற்றும் ரமேஷ் என்பவர்களது வீடு, தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக ஆட்சி காலத்தில் ஊழல் வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பின்னர் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
இதனிடையே, தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள தவெக அரசை கவிழ்க்க தவெக எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தியதாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் மீது புகார் எழுந்துள்ள நிலையில், அந்த வழக்கில் இருவரும் முன்ஜாமீன் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.















