புதுடெல்லி: பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளது புத்தரின் மகத்தான பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்துரைக்க உதவும் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
புத்தரின் போதனைகளை போற்றும் சர்வதேச அபிதம்மம் திவஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இதுகுறித்து கூறியதாவது: தொன்மையான பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது, புத்தரின் மகத்தான பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்துக்காட்ட உதவும். அதேநேரம், சுதந்திரத்துக்குப் பிறகு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை போற்றாமல் புறக்கணிப்பு செய்ததை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய புவிசார் அரசியல் சூழ்நிலையில் புத்தரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளது. அதன்படி போரை விலக்கி வைத்து அமைதிக்கான பாதையை உருவாக்குவதில் அனைத்து நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு நாடும் அதன்பாரம்பரியத்தை அதன் அடையாளத்துடன் தொடர்புபடுத்தி பெருமை கொள்ளும்போது இந்தியா அதில் மிகவும் பின்தங்கியது. இதற்கு, சுதந்திரத்திற்கு முன்னர் இ்ந்தியாவுக்கு படையெடுத்து வந்தவர்கள் நமது அடையாளத்தை அழிக்க முயன்றதே காரணம். அதன்பின்னர் இருந்த ஆட்சியாளர்கள் (காங்கிரஸ்) அடிமை மனப்பான்மையால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்ததால் அதை வழிமுறையை கடைபிடித்து வந்தனர். தற்போது அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது.
நாடு இப்போது தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட்டு சுயமரியாதை, தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. இந்த மாற்றத்தால்தான் துணிச்சலான முடிவுகளை அரசு எடுக்கிறது. அதன் ஒரு பகுதிதான் பாலிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. எனது அரசின் கொள்கைகள், திட்டங்கள்புத்தபெருமானின் போதனைகளால்வழிநடத்தப்படுகின்றது. அதேபோன்று, உறுதியற்ற மற்றும் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ள உலகம் அதன் பிரச்சினைகளுக்கு புத்தரின் போதனைகளில் இருந்து தீர்வுகளைப் பெற முடியும்.
புத்தரின் கூற்றுப்படி சண்டை மற்றும் கருத்து வேறுபாடுகள் அமைதிக்கு வழிவகுக்காது. அமைதியை விட பெரிய மகிழ்ச்சி எதுவும் இல்லை என்பதை இந்தஉலகம் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.