உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளை உறுப்பினர்களாக நியமிக்கும் சட்டத்திருத்தம்: முதல்வர் ஸ்டாலின் தாக்கல்

0
41

நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்டத்திருத்த மசோதாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவையில் நேற்று தமிழக நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வகை செய்யும் சட்ட மசோதாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிமுகம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறையுடன் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த 2 சட்டமுன்வடிவுகளை அறிமுகப்படுத்தப் போகிறோம். இந்தத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.667 கோடியாக இருந்தது. ஆனால், இப்போது இந்த நிதியாண்டில் ரூ.1,432 கோடியாக, அதாவது 2 மடங்கு உயர்த்தியுள்ளோம். நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் மாநிலம் தமிழகம்தான்.

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அரசு உயர் பதவிகளில் மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு பெறுவதை ஊக்குவிக்க, ஊக்கத்தொகை வழங்கி வருகிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் புரிய கடன் உதவி வழங்கும் திட்டத்தை, அறிவுசார் குறைபாடுடையோர், புறஉலகச் சிந்தனையற்றோர், தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோருக்கும் நீட்டித்து அரசாணை வெளியிட்டிருக்கிறோம்.

அரசுப் பணியாளர்களுக்கான தேர்வுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத இட ஒதுக்கீடு மூலம், கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 1,493 மாற்றுத்திறனாளிகள் அரசுப் பணியைப் பெற்றுள்ளனர். இதேபோல, மாற்றுத் திறனாளிகளைப் பணியமர்த்துவதை தனியார்த் துறைகளில் ஊக்குவிக்க, குறைந்தது 10 மாற்றுத்திறனாளிகளைப் பணியமர்த்தி இருந்தால், அந்த நிறுவனங்களுக்கு மாதம் ஒருவருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் ஊதிய மானியத்தை ஒரு ஆண்டுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளோம். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நவீனக் கருவிகள் வழங்கும் திட்டம் ரூ.125 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. மெரினா, பெசன்ட்நகர் கடற்கரைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மரப்பாதையை உருவாக்கியுள்ளோம்.

இவற்றுக்கெல்லாம் மகுடம் வைப்பதுபோல், மாற்றுத்திறனாளிகளின் குரல், உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க வேண்டுமென கடந்த பிப்.27-ம் தேதி கொளத்தூரில் அறிவித்தேன். 12 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு இதன் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்புக் கிடைக்கும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலேயும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கக்கூடிய வகையில், சட்டமசோதா நிறைவேற்றப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இப்போது அந்த மசோதாக்களை முன்மொழிவதை வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன்.

தமிழகத்தில் இருக்கும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், அதாவது கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக ஆக்கப்படுகிறார்கள்.

இதன்மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளுடைய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், சிறப்புரிமைகளையும் சமமாகப் பெறுவதற்கு இந்தச் சட்டமுன்வடிவுகள் வழிவகுக்கும். இது, ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்று இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்துகிற சமூகநீதியை அடைவதற்கான மற்றுமொரு முன்னெடுப்பாகும்.

இதனை நடைமுறைப்படுத்த, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, தமிழ்நாடு நகர்ப்புர ஊராட்சிகள் சட்டம் 1998 ஆகியவற்றில் திருத்தங்கள் முன்மொழிகிறேன். இந்த மசோதாக்கள் மூலம், மாற்றுத்திறனாளிகள் குரல், உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்துகிற வல்லமை பெற்றவர்களாகத் திகழ்வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, 2 சட்ட மசோதாக்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலி்ன் பேசும்போது, ‘‘தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 35 பேர் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள்.

ஆனால், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, 650 மாற்றுத் திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத் திறனாளிகள் கிராமப் பஞ்சாயத்துக்களிலும், 388 மாற்றுத் திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத் திறனாளிகளும் நியமிக்கப்படுவர்’’ என்றார். இந்த மசோதாக்கள் விரைவில், சட்டப்பேரவையில் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

வாக்களிக்கும் உரிமை இல்லை! – மேற்கண்ட சட்ட மசோதாக்களில் கூறப்பட்டு இருப்பதாவது: ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளி ஒருவரை நியமிக்கும்போது, சம்பந்தப்பட்ட ஊராட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட அந்த நியமனம் கூடுதல் இடமாக இருக்க வேண்டும். உரிய தகுதிகளை பெற்றிருக்க வேணடும்.

ஊராட்சியின் பதவிக்கால அளவுடன், நியமன உறுப்பினரின் பதவிக்காலம் முடிவடைய வேண்டும். அவருக்கு வாக்களிக்க உரிமை இல்லை. நகர்ப்புற உள்ளாட்சிகளை பொறுத்தவரை, மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 100-க்கு அதிகமாகும்போது, மாற்றுத்திறனாளிகள் இருவர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here