ஓய்வுபெற்ற நீதிபதி தமிழ்வாணன் மறைவுக்கு, முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய தலைவருமான தமிழ்வாணன் (71) உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சென்னையில் நேற்று காலமானார்.
சட்டத் துறையில் பயின்று வழக்கறிஞராக தனது பணியை தொடங்கியவர், 2005 முதல் 2016 வரை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தார். பல முக்கிய வழக்குகளில் சிறப்பான தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
நீதித்துறையில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, கடந்த 2021-ம் ஆண்டு தமிழக அரசால், தமிழ்நாடு மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்த பதவியில் இருந்தபோது ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக துரிதமாக செயல்படுவதில் அக்கறை காட்டி வந்தார்.
அவரது மறைவுக்கு முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அமைச்சர் ம.சுப்பிரமணியன், விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சென்று, தமிழ்வாணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
முதல்வர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய தலைவரும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியுமான தமிழ்வாணன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
நீதி வழங்கும் பணியிலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை காக்கும் பணியிலும் திறம்பட செயல்பட்ட தமிழ்வாணனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.














