இஸ்ரேல், ஹமாஸ் குழுவினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் குழுவினர் இடையே போர் நடைபெற்று வந்தது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் 20 அம்ச திட்டத்தை முன்வைத்தார்.
இதுதொடர்பாக எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் இஸ்ரேல் அரசு, ஹமாஸ் குழுவினர் இடையே கடந்த 6-ம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. இஸ்ரேல் அரசின் மூத்த அமைச்சர் ரோன் டெர்மர் தலைமையிலான குழுவும், ஹமாஸ் மூத்த தலைவர் காலில் அல் ஹையா தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் நேற்று சுமுக உடன்பாடு எட்டப்பட்டது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பாலஸ்தீனத்தின் காசாவில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த இஸ்ரேல் அரசு, ஹமாஸ் குழு ஒப்புக் கொண்டுள்ளன. இதுதொடர்பாக இருதரப்பும் முதல்கட்ட அமைதி திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன. இதன்படி இஸ்ரேல் பிணைக் கைதிகள் அனைவரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். வரும் திங்கள்கிழமை பிணைக் கைதிகள் விடுவிக்கப்படக்கூடும். காசாவில் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்கோடு பகுதிக்கு இஸ்ரேல் ராணுவ வீரர்கள் திரும்புவார்கள். இருதரப்பு இடையே அமைதியை நிலைநாட்ட முதல் அடி எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. அமைதிப் பேச்சுவார்த்தையின்போது கத்தார், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகள் சமரச தூதர்களாக செயல்பட்டன. அந்த நாடுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காசா மட்டுமன்றி ஒட்டுமொத்த மத்திய கிழக்கிலும் அமைதி திரும்பும். இவ்வாறு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அறிவிப்பை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் டெல் அவிவ் நகரில் நேற்று இரவு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் காசா போர் நிறுத்தத்துக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கவேண்டும். அதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு இருக்கிறது” என்று குறிப்பிட்டு உள்ளார்.
வரும் 12-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இஸ்ரேலுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எகிப்து நாட்டுக்கும் அவர் பயணம் மேற்கொள்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.