பெங்களூருவைச் சேர்ந்த வழக்கறிஞர் திலீப் குமார், பெங்களூரு 48-வது கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவில், “நடிகர் பிரகாஷ் ராஜ் கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளார். இது சட்டவிரோதமானது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கில் 3 முறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகாததால் கடந்த ஜூன் மாதம் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இவ்வழக்கு நேற்று பெங்களூரு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பிரகாஷ் ராஜ் நேரில் ஆஜரானார். அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனஞ்செய், “நீதிமன்றம் பிறப்பித்த சம்மன் எதுவும் பிரகாஷ் ராஜுக்கு வழங்கப்படவில்லை. ஊடகங்கள் வாயிலாகவே அவருக்கு தகவல் தெரிய வந்தது. எனவே அவருக்கு பிறப்பித்த கைது உத்தரவை ரத்து செய்து ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிட்டார்.
அதனை ஏற்ற நீதிமன்றம், பிரகாஷ் ராஜுக்கு ரூ.4 ஆயிரம் உத்தரவாத தொகையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.















