மீஞ்சூர் அருகே வீட்டில் படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை வெட்டிய கஞ்சா போதை இளைஞர்கள்

0
26

மீஞ்சூர் அருகே இரவில் வீட்டில் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை அரிவாளால் வெட்டிய 3 பேர் கும்பலில் ஒருவர் பிடிபட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே வல்லூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் 2-ம் ஆண்டு படிக்கிறார்.

நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் வீட்டின் முதல் மாடியில் உள்ள அறையில் தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருந்தார். அப்போது, இளைஞர்கள் 3 பேர், வீட்டின் பின்புறம் உள்ள முட்புதர் வழியாக பக்கத்து வீட்டு மாடியில் ஏறியுள்ளனர்.

பின்னர், அங்கிருந்து மாணவியின் வீட்டு முதல்மாடிக்குத் தாவி அங்குள்ள பொருட்களை திருட முயன்றதாகக் கூறப்படுகிறது. அவர்களைக் கண்டதும் அந்த மாணவி அதிர்ச்சியில் கூச்சலிட்டுள்ளார்.

மாணவியைக் கண்ட இளைஞர்கள், தங்களை மாட்டிவிட்டுவிடு வாரோ என்ற பயத்தில், அவரை அரிவாள், கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டுதப்பினர். இதில் மாணவிக்கு வலது உள்ளங்கை, முழங்கை, நெற்றி, கால் மற்றும் பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது பெற்றோர், சகோதரர் மற்றும் அக்கம்பக்கத்தினர் தப்பி ஓடிய இளைஞர்களை பிடிக்க விரட்டினர். இதில், இருவர் தப்பிய நிலையில் ஒருவர் பிடிபட்டார். அவருக்கு தர்ம அடிகொடுத்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், பிடிபட்டது திருவள்ளூர் மாவட்டம், வல்லூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த டில்லிபாபு என்ற ரோலக்ஸ் (24) என்பது தெரிந்தது. மேலும், அவர் கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பொதுமக்கள் தாக்கியதில் அவரது பின் தலையில் காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார். தாக்குதலுக்குள்ளான கல்லூரி மாணவியும், மீஞ்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தப்பி ஓடிய இளைஞர்களை உடனடியாக கைது செய்ய ஆவடி காவல் ஆணையர் பிரேம்ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக இருவரையும் போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

தலைவர்கள் கண்டனம்

இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதைப் பற்றி முதல்வர் ஒரு வார்த்தை பேசினாரா?

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: 5 ஆண்டுகால திமுக ஆட்சியில், தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் பெண் களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.

பாமக தலைவர் அன்புமணி: திமுக ஆட்சியில் வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படும் போதைப் பொருட்களால் அவர்களின் எதிர்காலம் வீணாவதோடு, சட்டம் ஒழுங்கு சீர்கேடும் ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here