புதுச்சேரியில் அமைச்சரவையில் அதிமுக இடம் கேட்கும் என்று மாநிலச் செயலர் அன்பழகன் உறுதிப்பட தெரிவித்தார்.
புதுச்சேரியில் உப்பளம் தொகுதியில் வென்ற பிறகு செய்தியாளர்களிடம் அன்பழகன் கூறியது: நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 6வது முறையாகப் போட்டியிட வாய்ப்புக் கொடுத்த அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி. மேலும், புதுச்சேரியில் மீண்டும் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை அமைக்க போகிறது.
அந்த ஆட்சியின் அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுவதற்கு எங்கள் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி வாயிலாக அனுமதி கேட்போம். யாரும் தர்மத்துக்காகக் கட்சி நடத்துவதில்லை. மேலும், புதுச்சேரியைப் பொறுத்தவரை முதல்முறையாக வெற்றி பெற்றவர்கள்கூட சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சராகப் பதவி வகித்துள்ளனர்.
5-வது முறையாக வெற்றி பெற்றுள்ளேன். அதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்னை வேறு கட்டத்துக்கு உயர்த்த வேண்டும் என்று கூட வாக்கு அளித்து இருக்கலாம். அதற்காகத் தொகுதி மக்களுக்கு உறுதுணையாக பணியாற்றுவேன்” என்று அவர் கூறினார்.














