காக்களூரில் ஒரே நாளில் 18 பேரை தெரு நாய் கடித்ததை அடுத்து நேற்று கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், காக்களூர், புட்லூர் பகுதிகளில் 75 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத் தப்பட்டது; 10 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் ஊராட்சி பகுதிகளில் கூட்டமாக சுற்றி வரும் தெரு நாய்களில் ஒன்று நேற்று முன் தினம் சாலையில் சென்ற 18 பேரை கடித்தது. அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து நேற்று திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப்பின் உத்தரவின்படி, நேற்று இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு), உதவி இயக்குநர் (ஊராட்சிகள் மற்றும் தணிக்கை), திருவள்ளூர் நகராட்சி ஆணையர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காக்களூர், புட்லூர் ஊராட்சிகள், இரு ஊராட்சிகளை ஒட்டியுள்ள திருவள்ளூர் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, கால்நடை பராமரிப்புத் துறை உள்ளிட்டவை சார்பில் நேற்று 75 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 10 தெரு நாய்களுக்கு, திருவள்ளூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மையத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், ஆட்சியர் தலைமையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், கால்நடை பராமரிப்பு துறை அலுவலர்கள், ஆவடி மாநகராட்சி ஆணையர், திருவள்ளூர் உள்ளிட்ட 6 நகராட்சி ஆணையர்கள், மீஞ்சூர் உள்ளிட்ட 8 பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், 14 ஊராட்சி ஒன்றியங்களின் ஆணையர்கள், 526 ஊராட்சிகளின் செயலாளர்கள் ஆகியோர் பங்குபெறும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
