தமிழில், மனுநீதி, தவசி, சவுண்ட் பார்ட்டி உள்பட சில படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகை பிரதியுஷா. இவர், சித்தார்த்தா ரெட்டி என்பவரைக் காதலித்து வந்தார். கடந்த 2002-ம் ஆண்டு பிப்.23-ம் தேதி இருவரும் விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மறுநாள் பிரதியுஷா மரணமடைந்தார். சித்தார்த்தா ரெட்டி உயிர் பிழைத்தார். அவர்கள் அருந்திய குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி கலந்திருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
பிரதியுஷாவின் தாய் சரோஜினி தேவி, இது வெறும் தற்கொலை அல்ல; கூட்டுப் பாலியல் வன்கொடுமை என்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் இதற்குப் பின்னால் இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்தச் சம்பவத்தில் பிரதியுஷாவை தற்கொலைக்குத் தூண்டியதாக சித்தார்த் ரெட்டி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கை விசாரித்த சிபிஐ, சித்தார்த்தா ரெட்டி மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
அதனடிப்படையில், கடந்த 2004-ம் ஆண்டில் சித்தார்த் ரெட்டிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையை ஹைதராபாத் முதன்மை அமர்வு நீதிமன்றம் விதித்தது. இத்தண்டனையை, 2011-ம் ஆண்டு உயர்நீதிமன்றம் 2 ஆண்டுகளாகக் குறைத்ததுடன் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சித்தார்த் ரெட்டியும் பிரதியுஷாவின் தாயார் சரோஜினி தேவியும் 2012-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தை அணுகினர். 14 ஆண்டு விசாரணைக்குப் பிறகு உயர் நீதிமன்றத் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அதன்படி சித்தார்த் ரெட்டி 4 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்றும், தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள அபராதத்தைச் செலுத்த வேண்டும் எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராஜேஷ் பிண்டால் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.














