மரண தண்டனையில் காப்பாற்றப்பட்டு 20 ஆண்டு சிறையில் இருந்த அப்துல் ரஹீம் நேற்று கேரளா திரும்பினார்.
கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரஹீம் சவுதி அரேபியாவில் அப்துல்லா என்பவரின் வீட்டில் 2006-ல் கார் ஓட்டுநராகப் பணியாற்றினார். அப்துல்லாவின் மகன் ஒரு மாற்றுத்திறனாளி. அந்த சிறுவனையும் பராமரிக்கும் பொறுப்பு ரஹீமிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒருநாள் சிறுவனை காரில் ரஹீம் அழைத்துச் சென்றபோது சிறுவனின் கழுத்தில் இணைக்கப்பட்டிருந்த செயற்கை சுவாசக் குழாய் மீது ரஹீமின்கை தவறுதலாகப் பட்டதில் மரணமடைந்தான்.
சிறுவனின் பெற்றோர் தொடுத்த வழக்கில் ரஹீமுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது கொலை அல்ல விபத்து என்று ரஹீம் சார்பாக பல்வேறு அமைப்புகள் வாதிட்டன. இறுதியில் நஷ்ட ஈடாக இந்திய மதிப்பில் ரூ.34 கோடி `குருதிப் பணம்’ அளிக்கும்பட்சத்தில் ரஹீமுக்கு மன்னிப்பு அளிக்க பாதிக்கப்பட்ட பெற்றோர் தரப்பு முன்வந்தது.
இதையடுத்து சவுதியில் 18 ஆண்டுகளாக சிறையில் சிக்கி தவித்து மரணத்தின் விளிம்பில் இருக்கும் ரஹீமை காப்பாற்ற ஒட்டுமொத்த கேரள மக்களும் ஒன்று திரண்டனர். கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து முயற்சி செய்து ரூ.34.4 கோடி நிதி திரட்டப்பட்டது.
இதையடுத்து சிறுவனின் பெற்றோருக்கு ரூ.34 கோடி குருதிப்பணம் வழங்கப்பட்டது. பணம் தரப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையில் பொது மன்னிப்பு மூலம் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலையான அப்துல் ரஹீம் நேற்று கேரளாவுக்கு வந்தார். கோழிக்கோட்டிலுள்ள கரிப்பூர் விமானநிலையத்தில் வந்திறங்கிய அவரை குடும்பத்தாரும், உறவினர், நண்பர்களும் உற்சாகத்துடன் வரவேற்றனர். ரஹீமைப் பார்த்ததும் குடும்பத்தார் கதறி அழுதனர்.
அப்போது அப்துல் ரஹீம் செய்தியாளர்களிடம் கூறும்போது, “எனக்காக உதவிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. எனக்காக ரூ.34 கோடி திரட்டி உதவிய கேரள மக்களுக்கு என்றென்றும் கடமைப் பட்டுள்ளேன். அவர்களை மறக்கவே மாட்டேன்” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். பின்னர் தன்னை வரவேற்கத் திரண்டிருந்த மக்களைப் பார்த்து கையசைத்துவிட்டு அவர்தனது கிராமத்துக்கு புறப்பட்டார்.
