பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த 15, 16 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபின் அண்ணனும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப், இந்திய நிருபர்களுக்கு இஸ்லாமாபாத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அவரது வருகை நல்ல தொடக்கம் ஆகும். இங்கிருந்தே இரு நாடுகளும் முன்னேறி செல்ல வேண்டும். இந்தியா, பாகிஸ்தான் இடையே புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது.எனது ஆட்சிக் காலத்தில் இந்தியா, பாகிஸ்தான் உறவை சீர்படுத்த தீவிர முயற்சி செய்தேன். ஆனால் எனது முயற்சிகள் தோல்வி அடைந்தன. இந்திய பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அவதூறான கருத்துகளை தெரிவித்தார். இதன்காரணமாக இரு நாடுகள் இடையிலான உறவு பாதிக்கப்பட்டது. எனது ஆட்சிக் காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி லாகூரில் உள்ள எனது வீட்டுக்கு வருகை தந்தார். இது சாதாரண விஷயம் கிடையாது. அவரது வருகை சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது.