நாகர்கோவில் சைமன் நகரைச் சேர்ந்த கலாதாரன் (53) என்பவர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலக சாலை, தெற்கு தெருவில் 9 வருடங்களாக மருந்து கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு கடையைப் பூட்டிவிட்டுச் சென்றார். மறுநாள் காலை 9 மணிக்குத் திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, மேஜை டிராயரில் இருந்த ₹1 லட்சத்து 5 ஆயிரத்தைக் காணவில்லை. இரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் கடையில் திருடிச் சென்றிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே நடந்த இந்த திருட்டுச் சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













