மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சூரியன் என்பவர் மகன் ஷாஜி (47) இவர் ஜவுளி கடை நடத்தி வருகிறார். மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் மகன் ஜஸ்டின் (46). இருவரும் நண்பர்கள்.
இந்த நிலையில் ஜஸ்டின் தனது நண்பர் ஷாஜியிடமிருந்து ரூ 4. 5 லட்சம் கடனாக வாங்கி உள்ளார். இதற்கு ஈடாக ஜஸ்டின் தனது வங்கி கணக்கில் இருந்து செக் ஒன்றை வழங்கி உள்ளார். பின்னர் குறிப்பிட்ட தேதியில் வங்கியில் ஷாஜி செக்கை செலுத்திய போது கணக்கில் பணம் இல்லாதது தெரிய வந்தது.
இது தொடர்பாக ஷாஜி குழித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிமன்றம் 1 – ல் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மோசஸ் ஜெய் சிங் மோசடியில் ஈடுபட்ட ஜஸ்டினுக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும் பணத்தை வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார்.