கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தை உலுக்கியவர் ஜெனிஷ்.. இவரை 2 நாட்களுக்கு முன்பு மோசடி வழக்கில் போலீசார் கைது செய்திருந்தனர்.. இவரிடம் விசாரணையும் நடந்து வருகிறது.. இந்நிலையில், தற்போது ஜெனிஷ் பற்றின பின்னணி தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது… யாரிந்த இளைஞர?
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்துக்கு அருகே பாகோடு, பாளையங்கெட்டி பகுதியை சேர்ந்தவர் 25 வயதான ஜெனிஷ்.. சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்து வரும் இவருக்கு, 3 வருடத்துக்கு முன்பு திருமணமாகி மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்.
ஆனால் பல பெண்களை ஏமாற்றி பணம் பறிக்க துவங்கி உள்ளார்.. தன்னை தொழிலதிபர் போல காட்டிக்கொண்டு, திருமணம் செய்யவில்லை என்று பொய்யையும் சொல்லிக்கொண்டு, பெண்களை தன் வலையில் விழ வைத்துள்ளார்.
கன்னியாகுமரி ஜெனிஷ்
அந்தவகையில், புதுக்கடைப் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சுமார் 26 சவரன் நகையைப் பெற்றார். சுயரூபம் தெரிந்ததும் அந்தப் பெண் விலகி, தன்னுடைய நகையைக் கேட்டுள்ளார்.. ஆனால் ஜெனிஷ் தரவில்லை. இதனால் அந்த பெண் புதுக்கடை போலீசில் புகார் தந்தார்..
இதேபோல களியக்காவிளை பகுதியில் வெளிநாட்டில் வேலை செய்யும் இளைஞரின் மனைவியிடமும் காதலிப்பதாகப் பழகி 47 சவரன் நகையை வாங்கி ஏமாற்றியிருக்கிறார்..
லேட்டஸ்டாக மருதன்கோடு பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியிடம் பழகி வீட்டிலிருந்து நகைகளை எடுத்துவர வற்புறுத்தியுள்ளார். அந்த மாணவி வீட்டில் இருந்த 140 சவரன் நகைகள், 20 லட்சம் ரூபாய் பணத்தை ஜெனிஷிடம் கொடுத்துள்ளார். இந்த நகை மற்றும் பணத்தை விற்றும் அடகுவைத்தும், ஒரே வருஷத்தில் 2 ஆம்னி பஸ்கள், 4 சொகுசு கார்கள் வாங்கி கோடீஸ்வரராகியுள்ளார்
இந்த மாணவி அளித்த புகாரில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசாரால் ஜெனிஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை அவர் மீது 3 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. எஸ்.பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாரிந்த ஜெனிஷ்? 10ம் வகுப்பு தோல்வியடைந்தவர் ஜெனிஷ்.. கடந்த ஒரு வருடமாகத்தான் பெண்களை ஏமாற்றும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.. இவர் பெண்களை ஏமாற்றும் ஸ்டைல் மிகவும் வித்தியாசமானது.. முதலில் சம்பந்தப்பட்ட பெண்களிடம், தன்னை வசதியானவர் போல காட்டிக் கொண்டு, அதற்கு பிறகு காதலை சொல்வார்..
வசதி படைத்த பெண்கள்
அரசாங்க ஊழியர்களின் மகள்கள், வசதியான வீட்டுப் பெண்கள் , கணவன் வெளிநாட்டிலுள்ள பெண்களை மட்டுமே குறிவைத்துள்ளார்.. எந்த பெண்ணிடம் பேசினாலும், ஒவ்வொரு முறையும் சொகுசு கார்கள், காஸ்ட்லி பைக்குகளில் சென்றுதான் பேசுவாராம்.
பெண்களுடன் நெருக்கமாக இருந்ததை ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி பணம் மற்றும் நகைகளைப் பறித்துள்ளார்
பெண்களைப் பெரிய அளவில் ஏமாற்றுவதற்கு முன்பு, பிசினஸ் முதலீடு என்று சின்ன தொகையை கடனாக வாங்குவாராம்.. பிறகு அவர் சொன்ன தேதிக்கு முன்பேயே அந்த பணத்தை திருப்பி கொடுத்து, அவர்களின் நம்பிக்கையை ஏற்படுத்துவார்.. அதற்கு பிறகு பெரிய அளவில் நகை, பணத்தை உருவிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவாராம்.
2 ஆம்னி பஸ்கள்
அப்படித்தான் மாணவி தன்னுடைய வீட்டில் இருந்த 140 சவரன் நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் பணத்தை ஜெனிஷிடம் தந்துள்ளார்.. ஆனால் நகை மற்றும் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியிருக்கிறார். வீட்டில் நகை மாயமானது குறித்து பெற்றோர் விசாரித்தபோதுதான் இந்த உண்மை தெரியவந்துள்ளது.
இப்படி பெறப்பட்ட பணத்தை தனது சவுண்ட் சர்வீஸ் தொழிலிலும் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளார். தனது சவுண்ட் சர்வீஸ் தொழிலுக்குத் தேவையான விலையுயர்ந்த ஜெனரேட்டர்கள் மற்றும் நவீன ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட உபகரணங்களையும் அவர் வாங்கியுள்ளார்
ஒரே வருடத்தில் 2 ஆம்னி பஸ்கள், 4 காஸ்ட்லி கார்கள் வாங்கியிருக்கிறார்.. இதைத்தவிர வேறு சொத்துகள் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. ஆம்னி பஸ்கள் மற்றும் மோசடியாகச் சம்பாதித்த சொத்துகளைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பல பெண்கள் ஏமாந்திருக்கலாம் என்பதால், அவரைக் காவலில் எடுத்து விசாரித்தால் கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்…!!















