தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் கடந்த திமுக ஆட்சியில்தான் அதிகரித்தது என்று குற்றம்சாட்டியதால் சட்டப் பேரவையில் அமைச்சர்கள் – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கோவையில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக விவாதிக்க, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேற்று சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர்.
அப்போது நடந்த காரசார விவாதம் வருமாறு:
அமைச்சர் நிர்மல் குமார்: பன்னாட்டு போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவருடன் அப்போதைய முதல்வர், அமைச்சர்கள் வரை அனைவரும் எவ்வளவு தூரம் தொடர்பில் இருந்தனர் என்பது அனைவருக்கும் தெரியும்.
அவர் மீது தமிழகத்தில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. அதை தடுக்க முதல்வர் விஜய் அனைத்து சட்ட நடவடிக்கை களையும் எடுத்து வருகிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி: ஜாபர் சாதிக் மீது அப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்ததுமே, உடனடியாக கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம்.
தவெக அமைச்சர் ஒருவர் ஐபிஎல் போட்டியில் பவுடரை நொறுக்கி, குழந்தைக்கு மாத்திரையை நொறுக்கியதாக சொன்னார். அதுதொடர்பாக இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?
அமைச்சர் சரத்குமார்: வீடியோ வெளியானதும் ஏற்கெனவே விளக்கம் அளித்துள் ளேன். அதில் முரண்பாடு கருத்துகள் இருக்கலாம். அப்படி நடந்திருந்தால் திமுக ஆட்சியில், அந்த அரங்கின் வாசலில் திமுகவினர் போதைப் பொருள் விற்றதாக ஒப்புக்கொள்வார்களா?
அமைச்சர் ராஜ்மோகன்: போதைப் பொருள் ஒழிப்பில் அரசியல் தலையீடின்றி முழுமையான, நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: மாணவர்கள் கொலை வழக்கு விசாரணையில் அரசியல் அழுத்தம் இருக்காது. தமிழகத்தில் 2020-க்கு முன்பு போதைப் பொருள் கலாச்சாரம் இல்லை. போதை கலாச்சாரம் அதிகரித்தால், பாலியல் வழக்குகள் அதிகரிக்கும்.
திமுக ஆட்சியில் இரண்டரை வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், அரசியல் அழுத்தத்துக்குப் பிறகே திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
போதைப் பொருள் நடமாட்டம் என்பது 100 நாட்களில் உருவாகவில்லை. இதை அடித்தளத்தில் உருவாக்கியது திமுகதான்.
உதயநிதி: ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் போதைப் பொருள் இல்லாத தமிழகம் என்ற இலக்கோடு மதுவிலக்கு அமலாக்கத் துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு ஆகியவற்றை ஒன்றிணைத்து.
புதிய பிரிவு ஒன்றை அப்போதைய முதல்வர் ஸ்டாலின் உருவாக்கினார். அதற்கு தலைமை வகித்த அதிகாரி அமல்ராஜை எதற்காக சென்னை மாநகரக் காவல் ஆணையராக நியமித்தீர்கள்?
ஆதவ் அர்ஜுனா: தவெக ஆட்சியில் போதைப் பொருள் ஒழிப்புக்கு தனிப்படை அமைத்து, ரூ.264 கோடி நிதி ஒதுக்கி உள்ளோம்.
உதயநிதி: போதைப் பொருள் ஒழிப்பு, சட்டவிரோத கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் கடந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய 15 காவல் துறை அதிகாரிகள், காவலர்களுக்கு முதல்வர் விஜய் விருது கொடுத்துள்ளார்.
திமுக ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், அவர்களுக்கு ஏன்விருது கொடுத்தீர்கள்? அனைவரும் சட்டம் – ஒழுங்கு பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அதை கவனிக்கும் அமைச்சர் எங்கு இருக்கிறார்? அவர் ஏன் பதில் சொல்ல மறுக்கிறார்?
ஆதவ் அர்ஜுனா: கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு போதைப் பொருட்கள் வருவதை தடுக்க அனைத்து நடவடிக்கை களும் எடுக்கப்பட்டுள்ளன. கேரள உள்துறை அமைச்சரும், தமிழக முதல்வரும் அதற்காகத்தான் சந்தித்துப் பேசினர்.
திமுக கொறடா எ.வ.வேலு: எதிர்க்கட்சி தலைவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அரசு சார்பில் சரியான விளக்கங்கள் வழங்கப்படவில்லை. அதை கண்டித்து வெளிநடப்பு செய் கிறோம். இவ்வாறு கூறிவிட்டு திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.















