போராட்ட களத்தில் நிலைமை வன்முறையாக மாறுவதற்கு முன்பு இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடாதவாறு கவனமாகச் செயல்பட வேண்டுமெனவும் அவர்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் புரிந்துகொள்ள முயல வேண்டுமெனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்ட ஏற்பாட்டாளர்கள் ஆத்திரமூட்டும் வகையிலான பொது அறிக்கைகளை வெளியிட்டனர். அதன் விளைவாக ஏற்பட்ட வன்முறைக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும், போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யாபக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ரிஸ்வான் அகமது ஆஜராகி, வாதிட்டதாவது: நாடாளுமன்ற முற்றுகை பேரணிக்கு காவல் துறை அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி பேரணி நடைபெற்றது. இதில் ஏற்பட்ட மோதல்களை தடுக்கவும் மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்களை கலைக்கவுமே காவல் துறையினர் தடியடி நடத்தினர். நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவது சாதாரண விஷயம் கிடையாது.
ஒருவேளை இந்த முற்றுகைப் போராட்டம் ஒரு கலவரமாக மாறி துப்பாக்கி சூடு நடந்திருந்தால் யார் பொறுப்பேற்பது? இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட அனைத்து குறைபாடுகளுக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் ஏற்பாட்டாளர்களை் பொறுப்பேற்க வைக்க வேண்டும். கல் எறிதல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட சிறுவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தண்டனையாக சமூக சேவையில் ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: ஒரு போராட்டக் களத்தில் நிலைமை வன்முறையாக மாறுவதற்கு முன்பு, அந்த இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடாதவாறு நாம் கவனமாகச் செயல்பட வேண்டும். அவர்களுக்கு அறிவுரை கூறி, அமைதிப்படுத்துவதோடு, பிறரின் கருத்துகளுக்குச் செவிமெடுப்பதும் மிகச் சிறந்த விஷயம் ஆகும், அந்த வகையில், போராடும் இளைஞர்கள் சொல்வதைக் கேட்டு, அவர்கள் எதற்காக முழக்கமிடுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும், போராட்டங்களைக் கையாளும் போது காவல் துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், சூழ்நிலை கட்டுப்பாட்டை மீறிச் செல்லாதவாறு பார்த்துக் கொள்வதோடு, அமைதியான போராட்டங்களுக்கு வழிவகுப்பது முன்னுரிமையாக இருக்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் எங்கு நிகழ்ந்தாலும், அவற்றை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதனைதொடர்ந்து, இந்த மனு மீது மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், இந்த மனுவை போராட்டம் தொடர்பாக நிலுவையில் உள்ள பிற மனுக்களுடன் இணைக்குமாறு உத்தரவிட்டனர்.















