“முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்” – தூத்துக்குடி சம்பவத்துக்கு உதயநிதி கண்டனம்

0
21

‘காவல் மரணங்களின்போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது’ என தூத்துக்குடி இளைஞர் மரணம் அடைந்த சம்பவத்துக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது. போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.

காவல் மரணங்களின்போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்துக்கு தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல் துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது.

காவல் துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதல்வர் விஜய் உட்பட பல அமைச்சர்களும், அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான். நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்” என்று அந்தப் பதிவில் கனிமொழி தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here