ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது. இதில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். மேலும், எட்டு பேர் காயமடைந்துள்ளனர். அதில் ஆறு பேர் இந்தியர்கள்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாத இறுதியில் மோதல் மோதல் ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பும் போர்நிறுத்தத்தை அறிவித்தன. தொடர்ந்து கடந்த மாதம் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதை இறுதி செய்யும் பணிகளில் இரு தரப்பும் மும்முரமாக இருந்தன.
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் குறிப்பிட்ட வழித் தடத்தில்தான் எண்ணெய்க் கப்பல்கள் கடந்து செல்ல வேண்டும், ஓமன் கடற்கரை வழியாக கடந்து செல்லக் கூடாது என்று ஈரான் கட்டுப்பாடுகள் விதித்தது.
ஈரான் உத்தரவை மீறி ஓமன் கடற்கரை வழியாக ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்த 3 எண்ணெய்க் கப்பல்களைக் கடந்த வாரம் ஈரான் தாக்கியது. இதையடுத்து போர் நிறுத்தம் ரத்தானதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அதோடு அந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அதற்கு ஈரானும் பதில் தாக்குதல் கொடுத்தது. தற்போது இந்த மோதல் தீவிரமடைந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு கப்பல்கள் மீது தாக்குதல்
இந்நிலையில், ஓமன் கடற்கரை வழியாக ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைகளை கொண்டு தாக்கியுள்ளது. இந்த தாக்குதலை ஐக்கிய அரபு அமீரக அரசு உறுதி செய்துள்ளது. மொம்பாசா மற்றும் அல் பாஹியா ஆகிய இரண்டு சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். 8 மாலுமிகள் காயமடைந்தனர். அதில் 6 பேர் இந்தியர்கள். இருவர் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள்.
இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘ஹார்முஸ் ஜலசந்தியின் தெற்கு பகுதியில், ஓமன் கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த நம் தேசத்தின் மொம்பாசா மற்றும் அல் பாஹியா சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைகளை கொண்டு தாக்கியது. இதில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்த இந்திய மாலுமி மொம்பாசா கப்பலில் இருந்தார். உயிரிழந்தவருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த தாக்குதலில் கப்பல்களும் சேதம் ஏற்பட்டுள்ளது. தீப்பற்றிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டது. ஈரானின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. பிராந்திய ரீதியான பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்து ஈரான் செயல்பட வேண்டும்.
இந்த வகை தாக்குதலை ஈரான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஹார்முஸ் ஜலசந்தியை எந்தவித சரக்கு கப்பல்கள் கடக்க எந்தவித கட்டுப்பாட்டையும் ஈரான் விதிக்க கூடாது. அது தேசம், பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் நலன் சேர்க்கும்’ என கூறியுள்ளது.
முன்னதாக, எண்ணெய்க் கப்பலைத் தாக்கி ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், ஈரானின் 140 ராணுவத் தளங்களைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக அமீரகம், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
ஈரான் கடலோர பகுதிகளில் இருந்த ராணுவ தளங்களை எல்லாம் அமெரிக்கப்படை அழித்துவிட்டது. இந்நிலையில், இப்போது ஈரானின் உள்பகுதிகளை தாக்கத் தொடங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. ஈரான் துறைமுகத்துக்கு கப்பல்கள் செல்லவும், அங்கிருந்து வெளியேறவும் தடை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இந்த தாக்குதலை ஈரான் மேற்கொண்டுள்ளது.















