சீனாவின் ஆதிக்கத்துக்குப் போட்டியாக, முக்கிய தாதுக்கள் மற்றும் அரிய வகை தனிமங்கள் குறித்த கட்டமைப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் நேற்று கையெழுத்திட்டன.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்திருந்தார். இந்தப் பயணத்தின் இறுதி நாளான நேற்று டெல்லியில் நடைபெற்ற ‘குவாட்’ நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் ரூபியோ பங்கேற்றார். ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய மற்ற நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் இதில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்துக்கு நடுவே, முக்கிய தாதுக்கள் மற்றும் அரியவகை தனிமங்கள் குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டமைப்பு ஒப்பந்தத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் சுரங்க அகழ்வாராய்ச்சி, தாதுக்களைப் பதப்படுத்துதல், சுத்திகரிப்பு செய்தல், மறுசுழற்சி மற்றும் அதற்கான கூட்டு நிதியுதவி உள்ளிட்ட ஒட்டுமொத்த விநியோகச் சங்கிலி கட்டமைப்பிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நவீன செமிகண்டக்டர்கள், மின்சார வாகன பேட்டரிகள், போர் விமான பாகங்கள், மேம்பட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் தூய்மையான எரிசக்தித் தொழில்களுக்குத் தேவையான அரிய வகை தாதுக்களைப் பதப்படுத்துவதில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தச் சூழலில், சீனாவுக்கு மாற்றாக ஒரு விநியோக வலையமைப்பை உருவாக்க இந்தியாவும் அமெரிக்காவும் இந்த முக்கிய உத்தியைக் கையாண்டுள்ளன.
இதுகுறித்து இந்திய அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இது ஒரு சாதாரண வர்த்தக ஒப்பந்தம் அல்ல. இந்த தாதுக்கள் எங்கிருந்து வருகின்றன, யாரால் பதப்படுத்தப்படுகின்றன, இதனால் யார் பயனடைகிறார்கள் என்பதை முற்றிலும் மாற்றியமைக்கும் ஒரு மறுசீரமைப்பு நடவடிக்கை’’ என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 2025-ல் வாஷிங்டனில் நடந்த பிரதமர் மோடி – ட்ரம்ப் உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட அரசியல் முடிவுக்கு, இந்த ஒப்பந்தம் ஒரு செயல் வடிவத்தைக் கொடுத்துள்ளது.
இந்தியாவிடம் லித்தியம், கோபால்ட் மற்றும் டைட்டானியம் போன்ற அரிய தாதுக்களின் இருப்பு அதிகமாக இருந்தாலும், அதைப் பதப்படுத்தும் உள்நாட்டுத் திறன் குறைவாகவே உள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் அதிநவீன தொழில்நுட்பம், நிதி முதலீடு மற்றும் உலகளாவிய சந்தை வாய்ப்புகளைப் பயன்படுத்தி இந்தியா தனது பதப்படுத்தும் திறனை பலமடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது.















