சென்னை பாஸ்போர்ட் சேவை மையத்தில், பழங்குடியினர் தயாரிப்பு பொருட்களின் விற்பனை மையம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், மக்கள் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு சமூக முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மைய அலுவலகத்தில், பழங்குடியினர் கூட்டுறவு சந்தை மேம்பாட்டுக் கூட்டமைப்பு சார்பில், பழங்குடியினர் உற்பத்தி பொருட்களின் விற்பனை மையம் தொடங்கப்பட்டுளளது.
இந்த விற்பனை மையத்தில் கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருட்கள், இயற்கை உணவுப் பொருட்கள் மற்றும் காட்டு வளப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதன்மூலம், பழங்குடியினர் சமூகங்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதுடன், அவர்களின் தயாரிப்புகளுக்கு நேரடி விற்பனை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில், இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜா முருகன், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ்.விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.















