மதுராந்தகம் அடுத்த வையாவூரில் தனிநபர் ஒருவர் சாலையை ஆக்கிரமித்து அமைத்துள்ள சுவற்றை அகற்றாவிட்டால், சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பேனர் அமைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வையாவூர் கிராமத்தில் படவேட்டம்மன் கோயில் தெருவில் தனிநபர் ஒருவர், சாலையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் அமைத்துள்ளார்.
இதனால், அந்தத் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் குடியிருப்புக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் இறந்தவர்களின் உடலைக் கூட கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இப்பிரச்சினை குறித்து வருவாய்த் துறை சார்பில் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கியும் சுற்றுச்சுவர் அகற்றப்படாமல் உள்ளது.
இதனால், வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பு சுவற்றை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீஸாரைக் கண்டித்தும், சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக, அப்பகுதியில் அறிவிப்பு பேனர் வைத்துள்ளனர்.














